5.

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அதிர்ச்சியாய் இருவரும் ஷிவாவை பார்க்க, அறிவோ என்ன நடந்தது என்று முழுவதுமாக புரிந்து கொள்ளமுடியாத ஒரு அதிர்ச்சியில் தன் கழுத்தில் புதிதாய் ஏறியிருந்த தாலியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

'ஷிவா! என்னடா இப்படி அவசர பட்டுட்ட?" என்றான் கண்ணன் என்ன செய்வதென்று புரியாமல்.

"என்னை என்னடா பண்ண சொல்ற?அவ பேசினதை கேட்ட தானே? எப்படி பேசிறா பாரு? டேய் அவ இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்லடா. இதை இப்படியே வளர விட்டா மனசுக்குள்ளயே புழுங்கி தவிப்பாடா.. என்னால இவளை அப்படி பார்க்க முடியாது. என்கிட்ட கொடுத்திருடா.. என் கண்ணுக்குள்ள வச்சு பொத்தி வச்சு பார்த்துக்குறேன்." என்றான் ஷிவா கண்ணீருடன்.

அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் தங்கைக்காக பேசுவதா?? அவள் மனக் குமறல் எனும் பாதாளத்தில் விழுந்துவிடக் கூடாது என்று தன்னோடு பிடித்துக் கொள்ள போராடும் நண்பனுக்காக பேசுவதா? ஒன்றும் தெரியவில்லை... ஆனால் ஒன்று... இனி தன் தங்கை நன்றாக இருப்பாள் என்ற நிம்மதி உண்டாயிற்று.

அறிவை பார்த்து, “இனி நீ யார்கிட்டயும் போய் எதுவும் சொல்லவும் வேண்டாம்... நீ நல்லவன்னு நிரூபிக்கவும் வேண்டாம்... என் உயிரே போனாலும் இந்த விஷயத்தை பத்தி யாரையும் உன்னை தப்பா ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டேன். நானும் பேச மாட்டேன். என்ன நடந்தாலும் உனக்கு இனி நான் இருக்கேன். நான் பார்த்துக்குறேன். என்கிட்ட வந்துரு அறிவு...” என்றான் ஷிவா நா தழுதழுக்க....

அவனின் வார்த்தைகள் உள்ளுக்குள் பனியாய் இறங்கி குளிர்வித்தாலும்... திடீரென்று முளைத்த காளான் போல் எங்கிருந்தோ வந்து என்ன காரியம் செய்து விட்டான்... யாரிவன் லூசு மாதிரி பேசுறான் என்ற கோபமும் தன் அனுமதியில்லாமல் யாரோ ஒருத்தன் தனக்கு தாலி கட்டிவிட்டான் என்ற கோபமும் சேர்ந்து கொள்ளவும், அவனை அறைய கையை ஒங்கினாள்.

அவள் அவனுடைய அறிவு ஆயிற்றே இப்படி தான் செய்வாள் என்று அறிந்தவன் போல் அவளின் கரத்தை  லாவகமாக தடுத்த ஷிவா மெதுவாய் சிரித்தான்.

தங்கை தன் நண்பனை தவறாக நினைக்க கூடாது என்று நினைத்த கண்ணன்.

"அறிவு இங்க வாடா.." என்றதும் அவனிடம் இருந்த கரத்தை முறைத்து கொண்டே உருவியவள் கண்ணனிடம் தஞ்சமடைந்தாள்.

"அழகிம்மா... இப்போ நடந்தது உனக்கு பெரிய அதிர்ச்சியா இருக்கலாம்... ஆனா உனக்கு இந்த அன்னான் மேல நம்பிக்கை இருக்கு தானே?" என்று அவளின் முகத்தை நிமிர்த்தி கேட்டான் கண்ணன்.

"என்ன இப்படி கேக்கிற? உன்னை நம்பாம வேற யாரை நம்ப போறேன்?" என்றாள் அறிவழகி.

"அப்போ அண்ணா சொல்றதை நல்லா கேட்டுக்கோ. இங்க நடந்ததை வச்சு நீ ஷிவாவ தப்பா நினைக்காத..." என்றதும் முகத்தை திருப்பி சிவாவை முறைத்தாள் அறிவு.

இத்தனை நாள் தன்னை பார்க்க மாட்டாளா என்று ஏங்கிய மனதுக்கு இன்று அவளது முறைப்பும் குளுகுளுவென இருக்க, மெதுவாக இதழ் விரித்து கண்ணடித்தான் ஷிவா.

அவனின் செயல் அவளுக்குள் சிறிது அதிர்வலைகள் ஏற்படுத்தினாலும் அவன் மீதான கோபம் மட்டுப்படவில்லை.

“நம்ம வீட்டுக்கு வந்தப்ப உன்னை பார்த்துட்டு, ரொம்ப பிடிச்சு போய் உன்னை ரெண்டு வருஷமா உனக்கே தெரியாம விரும்புறான். உன் படிப்பு கெடக்கூடாதுன்னு நான் சொன்ன ஒரே காரணத்துக்காக எனக்காக உன்கிட்ட இவ்ளோ நாள் சொல்லாமலும் இருக்கான். உனக்கு வீட்ல போய் எல்லாத்தையும் சொல்றேன். இப்போதைக்கு எதை நினைத்தும் கவலை படாதேடா.” என்றான் கண்ணன்.

என்ன பேசுவதென்று தெரியாமல் திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியில் அமைதியாய் இருந்தாள் அறிவு.

"கண்ணா ஒரு நிமிஷம் இங்கேயே இருங்கடா. இதோ வந்துடறேன்." என்ற ஷிவா வேகமாய் சென்றவன், வேறொரு புது உடை வாங்கி கொடுத்து வேறு அறையில் மாற்றி கொள்ள சொன்னான்.

அவனை முறைத்து கொண்டே வாங்கி சென்று அவள் மாற்றி வந்தாள்.

அதற்குள் காவல்துறை நண்பன் வந்துவிட இருவரையும் ஒப்படைத்து நன்கு கவனிக்க சொன்னான் ஷிவா.

மூவரும் பின்னர் அறிவழகியின் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

பெண்ணை காணாமல் உயிரை கையில் பிடித்து கொண்டு அமர்ந்திருந்த இருவரும் அறிவழகியை கண்டதும் ஆனந்தத்தில் கண்ணீரோடு கட்டிக் கொண்டனர்.

"எங்கடா போன? உன்னை காணோம்னு எவ்ளோ தவிச்சு போய்ட்டோம்.. எங்க போறேன்னு சொல்லிட்டு போக மாட்டியா?" என்று கேட்டுக்கொண்டே அவளின் கழுத்தை பார்த்தவர் மிகவும் அதிர்ந்து போனார்.

“அம்மா அப்பா எதுவா இருந்தாலும் உள்ள போய் பேசிக்கலாம் வாங்க.” என்று உள்ளே அழைத்து போனான்.

"என்னடி வேலை செஞ்சுட்டு வந்துருக்க? கொஞ்ச நேரத்துக்கு முன்ன ஊரே உன்னை வாய்க்கு வந்தபடி பேசுச்சு... ஆனா நான் என் பொண்ணு தங்கம். அவ எந்த தப்பான வேலையும் செய்யமாட்டான்னு நெஞ்சு நிமிர்த்தி சொல்லிக்கிட்டு இருந்தேன். நீங்க நினைச்சது தப்பு... உங்க வளர்ப்பு சரியில்ல... ன்னு சொல்லாம சொல்லி... என் தலையில இடிய இறக்கிட்டியேடி பாவி... உனக்கு என்ன குறை வச்சோம்... உன்னை தரைல கால் படாம தாங்குனமே அதுக்கு நீ காட்ற நன்றியா இது.. சீ.. நீ என் பொண்ணே இல்ல.. வெளிய போய்டு... என் கண்ணு முன்னாடியே வராத..." என்று அறிவழகியின் கன்னங்களில் மாறி மாறி அறைந்தார் அவளின் அம்மா.

"அம்மா நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை... நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க... நீங்களா கற்பனை பண்ணி பேசாதிங்க..." என்றான் கண்ணன் கோபமாய்.

"யாருடா கற்பனை பண்றது? என்ன நீயும் உன் தங்கச்சி கூட கூட்டு சேர்ந்துட்டியாடா? உங்க ரெண்டு பேருக்கும் என்ன குறை வச்சோம்? எங்களை இப்படி தலை குனிய வச்சுட்டீங்களே?" என்று தன் தலையில் அடித்து கொண்டு அழுதார்.

ஷிவா கோபமாய் வாயை திறக்கும் முன் கண்ணன் பேசாதே என்று சைகை செய்ய, கையை இறுக மூடி தன் கோபத்தை கட்டு படுத்தினான்.

ஷிவாவையும் கண்ணனையும் பார்த்த அறிவழகி.

தன் தாயை ஒரு நொடி கூர்ந்து பார்த்தவள் பின் தந்தையை பார்க்க, தன் இரு கரங்களையும் விரித்து தலையசைத்து கண்ணீருடன் அழைத்தார் அவர்.

அந்த ஒற்றை தலையாட்டல் போதுமானதாக இருந்தது அவரின் மகளுக்கு.

அடுத்த நொடி மடைத்திறந்த வெள்ளமாய் குரல்வளையை அடைந்திருந்த துக்கம் வெளிவர, "அப்பா..." என்று ஓடி சென்று அணைத்து கொண்டாள்.

"அழாதடா..." என்று மென்மையாய் அவளின் தலையை கோதி விட்டார்.

அவளின் அழுகை மேலும் பெரிதாக... "அப்பா நீங்களும்..." என்று முடிக்க விடாமல், அவளின் இதழ் மேல் விரல் வைத்தவர்... "நீ என் பொண்ணுடா... தப்புன்னா எனக்கு பாடம் எடுக்குற குரு... நீ எப்படி டா தப்பு செய்வ?" என்று அணைத்து கொண்டார்.

அறிவழகியின் தந்தை கூறியதை கேட்ட அவளின் தாய்க்கு மேலும் கோபம் பொங்க, "இப்படி செல்லம் கொடுத்து கொடுத்து தான் கெடுத்து வச்சிருக்கிங்க..." என்று மீண்டும் பொரிய தொடங்க...

"போதும்... இனி ஒரு வார்த்தை பேச கூடாது." என்றார் வீடே அதிரும் கர்ஜனையில்.

"என் பொண்ணு தப்பு செஞ்சது நீ போய் பார்த்தியா? எவனோ ஏதோ சொன்னா நீ எப்படி இப்படி பேசலாம்? அவன் நம்ம பொண்ணு மேல நம்பிக்கை வைக்க என்ன இருக்கு? ஆனா நீ பெத்தவ தானே? உன் பொண்ண பத்தி உனக்கு தெரியாது?" என்றார் கோபமாய்.

அவரின் கேள்வியில் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணறினார் அவளின் அன்னை.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro