10.

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நீ சென்ற வழியில்
என் விழிகள்.....
வருவாயா சிம்டாங்காரா?

🌷🌷🌷🌷🌷🌷

மேகன் சொன்னவாறு, அவனுடைய தாத்தா, இரண்டு பேரை, நிறைமதி வீட்டிற்கு விஷயம் சொல்ல அனுப்பிவிட்டார். பிறகு மேகனுக்கு ஃபோன் பண்ணினார். மேகன் ஃபோனை எடுத்து பேசவில்லை. நிறைமதியை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, அவள் உறவினர்கள் வந்ததும் வீட்டிற்கு வந்துவிடுவான் என்று மேகனுக்காக காத்திருந்தனர் முதிய தம்பதிகள். ஒரு மணி நேரம் ஆகியும் மேகனும் வரவில்லை, அவனிடமிருந்து ஃபோனும் வரவில்லை. பிறகு,

"மேகனை நான் அழைத்து வருகிறேன்." என்று கூறி காரில் புறப்பட்டுச் சென்றார் தாத்தா.

அவர் கார் ஆஸ்பத்திரி செல்லும் ரோடில் போய்க் கொண்டிருந்த பொழுது, எதிரில் மேகனின் கார் கட்டுப்பாடில்லாமல் வருவதைக் கண்ட கார் ஓட்டுநர்,

" ஐயா! சின்னவர் கார் எதிரில் வருகிறது." என்று கூறி காரை ஓரமாக நிறுத்திவிட்டு, மேகன் காருக்கு எதிரில் நின்று கைகாட்டி, நிறுத்தும்படி சைகை செய்தான். ஆனால் மேகனின் கார் கட்டுப்பாடில்லாமல் வந்ததால் எதிரில் இருந்த கம்பத்தில் மோதி நின்றது. கார் ஓட்டுநரும் தாத்தாவும் வேகமாக ஓடிச்சென்று பார்க்கும் பொழுது, தலையில் அடிபட்டு மயங்கிக் கிடந்தான். சுற்றி இருந்தவர்கள் துணையுடன் மேகனை தன் காரில் ஏற்றிய தாத்தா ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.

நிறைமதியைச் சேர்த்து இருந்த அதே ஆஸ்பத்திரியில் மேகனுக்கு வேகமாக முதலுதவி செய்து கொண்டு, தன் குடும்ப மருத்துவரின் ஆஸ்பத்திரிக்கு மாற்றினார் தாத்தா. சிறிது நேரத்தில் மரகதமும் வந்தார்.

மேகனுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்த அறை வாசலில் பதற்றமாக அமர்ந்திருந்த தாத்தாவை, அழைத்து, "சின்ன அடிதான் கவலைப் படாதீர்கள்" என்று கூறிய குடும்ப மருத்துவர், மேகனுக்கு சிகிச்சை செய்யும் அறைக்குள் விரைந்தார்.

.... மேகனுக்கு குளிர்வது போலிருக்கவே, கண்களைத் திறக்காமலே ஏசி யின் ரிமோட்டை, கைகளால் தான் படுத்திருந்த மெத்தையில் தேடினான்.

"மேகன்! மேகன்!.... என்னங்க! அப்பா! மேகனுக்கு சுய உணர்வு வருகிறது... சீக்கிரம் வாங்க!" என்று மேகனின் அம்மா ஷோபனா அழைக்கும் குரலில் மெல்ல கண்களைத் திறந்து பார்த்தான் மேகன்.

அவனுக்கு அருகில் ஒரு நர்ஸ், அவனைப் பரிசோதனை செய்ய, நிறைமதிக்கு சிகிச்சை நடந்தது ஞாபகத்திற்கு வர, சட்டென்று எழுந்து அமர்ந்தவனிடம், "மெல்ல! மெல்ல! என்று நர்ஸ் அசுவாசப்படுத்தினார்.

' யார் இந்த நர்ஸ்?' என்று நினைத்தவனுக்கு, " மேகா!" என்று தாத்தா அழைக்கும் குரல் கேட்டு திரும்பினான்.

அம்மா, அப்பா, தாத்தா, ஆச்சி இன்னும் சிலர் நின்று கொண்டிருந்தனர். அவன் இருந்த அறையும் வித்யாசமாக இருந்ததால் சுற்றிலும் பார்த்தவனுக்கு தான் ஆஸ்திரேலியாவில் இருக்கும் தன்னுடைய அறையில் இருப்பது புரிய, "தாத்தா! நிறைமதி... நிறைமதி... " என்றவனிடம், "மேகா பேசிட்டியாடா?" என்ற அப்பா, அருகிலிருந்த ஃபோனை எடுத்து, " டாக்டர்! நான் பிறைசூடன், என் பையன் பேசுறான். கொஞ்சம் சீக்கிரமா வரமுடியுமா? ஓகே டாக்டர் நன்றி!" என்று கூறி ஃபோனைக் கட் செய்து விட்டு,

"இப்ப டாக்டர் வந்துடுவார்." என்று சந்தோஷமாக மற்றவர்களிடம் கூறியவர், மேகனைப் பார்த்து,

"மேகா! இப்ப உடம்பு எப்படி இருக்கு? எங்காவது வலி இருக்கா?" என்று கேட்டார்.

"இல்லப்பா! நான் எப்படி ஆஸ்திரேலியா வந்தேன்?" என்று கேட்டான்.

"நான் சொல்லலாமா?" என்று நர்ஸ் சிடம் கேட்டார். அதற்கு நர்ஸ்,

"டாக்டர் வந்துடட்டுமே சார்." என்றார்.

"இங்கே என்னதான் ப்பா நடக்குது?" என்று மேகன் கேட்டதும்,

"தயவுசெய்து அமைதியா இருங்க சார்... இன்னும் பத்து நிமிஷத்துல டாக்டர் வந்துடுவார்... உங்க நன்மைக்காகத் தான் சொல்றேன்... கொஞ்சம் அமைதியா கண்மூடி படுங்கள்... என்று சற்று கண்டிப்புடன் கூறினார்.

சிறிது நேரத்தில் வந்த டாக்டர், மேகனை நன்கு சோதனை செய்து பார்த்து விட்டு,

"வெரிகுட்! உங்கள் மகன் அதிர்ச்சியிலிருந்து வெளி வந்து விட்டார். இனி அவர் பழைய படி ஆகிவிடுவார்... நர்ஸ் கூட தேவையில்லை... சந்தோஷமா? நான் வர்றேன்..." என்று கூறி வெளியேறினார்.

மேகன், தன் அருகில் அமர்ந்திருந்த அவனுடைய அம்மா ஷோபனா வைப் பார்க்க,

"யாரோ ஒரு பொண்ண ஆஸ்பத்திரில சேர்த்து விட்டு வரும் போது உனக்கு சின்னதா விபத்து ஆகிவிட்டது... உடலில் காயம் சிறிது தான். ஆனால் நீ மனதளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை சந்தித்திருப்பதாகவும், அதனால் உனக்கு சுயஉணர்வு வர கொஞ்ச நாள் ஆகும்னும் டாக்டர் சொல்லி விட்டார். ரொம்ப பயந்துபோயிட்டோம் டா மேகா... நீ கண்ணே திறக்கவில்லை... மற்றபடி உடலில் உள்ள காயங்கள் அனைத்தும் ஆறிவிட்டது. .. அப்பா ரொம்ப பயந்துட்டார். அங்குள்ள டாக்டரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு இங்கே கூட்டி வந்து சிகிச்சை கொடுத்தார்... கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நீ சுயஉணர்வு இல்லாமல் இருந்த... உன் மனம் அந்த நிலையை விட்டு வெளியே வர நீயே ஒத்துழைக்காததால் தான் மூன்று மாதங்கள் ஆகிவிட்டது... " என்று கூறினார்.

'மூன்று மாதங்கள் சுயஉணர்வு இல்லாமல் இருந்தேனா?!! நிறைமதியை நினைக்க மனசுக்குள் மிகப்பெரிய பிரளயம் ஏற்படுவதுபோல் இருந்தது. அவளை இனி பார்க்கவே முடியாதா என்று நினைக்கையில் மீண்டும் தலை வலிப்பதுபோல இருந்தது... அவன் முகம் அவனுடைய வேதனையை வெளிப்படுத்த,

"மேகா! எந்த ஒரு கஷ்டமான விஷயத்தையும் யோசிக்காதே. .. இப்பதான் உன் மனநிலை சரியாக இருக்கு. அத கெடுத்துக்காதே. ... நினைத்து நினைத்து வேதனை படுவதால், நடந்தது எதுவும் மாறிவிடப்போவதில்லை... முடிந்தவரை மனச சந்தோஷமா வச்சுக்க... உன்னை நம்பி இத்தனை பேர் இருக்கிறோம்.... எங்களுக்காகவாவது மனச சந்தோஷமா வச்சுக்க..." என்று பிறைசூடன் கூறியதும்,

மேகன் ஏதோ சொல்ல வந்தான், "எங்களுக்கு நீ எதுவும் கூறவேண்டாம். .. கொஞ்ச நாள் போகட்டும்... பிறகு பேசலாம்... நீ இப்போ போய் உடை மாத்திக்கிட்டு கீழே வா... உனக்கு பிடிச்ச பலகாரமா செஞ்சு வச்சிருக்கேன், சாப்பிட்டு விட்டு உன் தோழர்களைப் பார்த்து விட்டு வா!" என்று கூறி ஷோபனா கீழே இறங்கி விட்டார்.

இரண்டு வருடங்களில் கிட்டதட்ட பழைய மேகனைப் பார்க்க முடிந்தது... எதையோ பறிகொடுத்தவன் போல விட்டத்தையே வெறித்துப் பார்ப்பது முற்றிலும் குறைந்திருந்தது. ஆஸ்திரேலியாவிலேயே தங்கிவிட்டான். .. விஷேசங்களுக்குக் கூட தாத்தா ஊருக்கு செல்வதை தவிர்த்தான். யாரையோ காதலித்து தோற்றுவிட்டான் என்று வீட்டில் உள்ள அனைவருமே நன்கு விளங்கியது... ஆனால் யாரும் மேகனிடம் கேட்கவில்லை.

"இருபத்தேழு வயசாகுது உங்க மகனுக்கு! இன்னும் கல்யாணம் செய்து கொள்ளச் சொன்னா, 'இப்ப என்ன அவசரம் னு கேட்கிறான்... எப்பதான் கல்யாணம் பண்ணிக்குவானாம்.... நான் ஒருத்தியே அவனோட அல்லாடுறேன்... நீங்க என்னவோ, உங்களுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி இருக்கீங்க... அவனிடம் என்னடா னு கேட்கக் கூடாதா?" என்று வழக்கம்போல புலம்ப,

"என்னை நிம்மதியா சாப்பிட விடுறியா?" என்று பிறைசூடன் கேட்டார்.

"உங்களுக்கு சாப்பாடு தான் முக்கியமா?"

"அடிப்பாவி! சாப்பாடு முக்கியமில்லையா? "

ஷோபனா முறைக்க...

"தினமும் சாப்பாட்டுல கையை வைத்ததும் ஆரம்பிக்கிறியே... "

"சாப்பிடும் போது தானே உங்களிடமும் உங்கள் மகனிடமும் என்னால் பேசமுடிகிறது."

ஷோபனா வைப் பார்த்தவர், "எனக்கு மட்டும் அந்த கவலை இல்லையா? அவன் இன்னும் அந்தப் பெண்ணை மறக்கவில்லை போல"

"தனியா இருந்தா எப்படி மறக்க முடியும்? இன்னொரு பொண்ணு வாழ்க்கையில வந்தா, பிள்ளை வந்தா மறந்து வாழலாம். இதெல்லாம் நானா சொல்ல முடியும்?"

இன்று எப்படியாவது பேச்சை ஆரம்பிப்போம் என்று உறுதி பூண்டு மாடிக்கு ஏறினார்.

"அப்பா! அம்மா பேசினது எனக்கு நல்லா கேட்டுச்சு. .. கொஞ்சம் டைம் கொடுங்க." என்று கூறி விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

மீண்டும் இரவில் வந்த கனவு ஞாபகத்தில் வர, நெருங்கிய தோழனுக்கு ஃபோன் பண்ணினான்.

"நீ புறப்பட்டு வா!" என்று ஃபோனை வைத்து விட்டான்.

அந்த வீடே வித்யாசமான அமைதியாக இருந்தது... மனதை மயக்கும் நறுமணம் இசையும் கசிந்தபடியே இருந்தது. ஆஸ்திரேலியாவில் இப்படி ஒரு வீடா? என்று அதிசயமாக பார்த்தான் மேகன். அருகில் சிபி அமர்ந்து இருந்தான்... உண்மையான நண்பன்.

"ஏன்டா இதையெல்லாம் நம்புகிறாயா? கூட கொஞ்சம் குழப்பி விடாமல் இருந்தால் சரி!" என்றான் சிபியிடம்.

"டாக்டர்ஸ் உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை னு சொல்லிட்டாங்க இல்லையா? வேறுவழி இவரையும் பார்ப்போம்."

இருவரையும் வயதான பழுத்த சுமங்கலி உள்ளே வரச் சொல்லிவிட்டு சென்றார்.

அந்த மனிதரைப் பார்த்தாலே தமிழர் என்று தெரிந்தது. நெற்றியில் பட்டை, காவி உடை, ருத்ராட்ச கொட்டை எல்லாம் எதிர்பார்த்து சென்ற மேகனுக்கு ஏமாற்றமாகி விட்டது. ஏனென்றால் அவர் சாதாரணமாக உடை அணிந்து இருந்தார். ஆனால் அவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருந்தது.

"ம்ம் சொல்லுங்க!"
என்றார்.

"எனக்கு இரண்டு மாதமாக ஒரே கனவு அடிக்கடி வருகிறது... " என்று கூறினான் மேகன்.

"என்ன அது?"

கொஞ்சம் தயங்கியவன், யாரோ ஒரு பெண்ணை அணைப்பது போலவும்... என் நெஞ்சில் அவள் சாயந்திருப்பது போலவும், அவள் நெற்றியில் முத்தமிடுவது போலவும், 'என் நினைவு வந்தால் வானத்தில் மற்ற நட்சத்திரங்களை விட ஒரு நட்சத்திரம் மட்டும் பிரகாசமாக மின்னும், அந்த நட்சத்திரத்திடம் நீ பேசு அது என்னிடம் கூறும்.' என்று அவளிடம் நான் சொல்வது போலவும், கடைசியில் அவள் உச்சி வகிட்டில் நான் குங்குமம் வைத்ததும், அதுவரை யாரோ போல தெரிந்த பெண், நிறைமதி யாக மாறினாள்."

"யார் அந்த நிறைமதி?"

" நான் ஒரு பெண்ணை விரும்பினேன்... அவள் இப்பொழுது உலகில் இல்லை... அவள் பெயர் எனக்குத் தெரியாது... இந்த பெயர்கூட அவள் சொன்ன பொய் பெயர்தான்."

"அவள் பெயர் தெரியாதா?"

"கடைசியாக தற்கொலை செய்து கொள்ள போகும் போது கூட எதையோ கூறிவிட்டு சென்றாள்." என்று நிறைமதி சம்மந்தப்பட்ட அனைத்தையும் கூறினான்.

சிறிது நேரம் அமைதியாக அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவர், "கொஞ்ச நேரம் வெளியே அமர்ந்திருங்கள் அழைக்கிறேன்" என்றார்.

வெளியே வந்த மேகன், "இவரும் மனோதத்துவ டாக்டர் சொன்னது போல,

"இதெல்லாம் இந்த வயதில் எல்லோருக்கும் வரும் கனவுதான்' என்பார் இல்லை!... 'உங்க அம்மா கல்யாணம் பண்ணிக்க சொல்வதால் பழைய காதலி கனவில் வருகிறாள்'. என்பார் வேறு என்ன சொல்லிவிடப் போகிறார் வாடா ஆபீசுக்கா வது போவோம்" என்றான்.

என்னை நம்பி கொஞ்சம் அடங்கி உட்காரேண்டா. .. இவர் வேறு வகையில் தீர்வு கொடுப்பார். .. எங்க கம்பனி முதலாளி இவரிடம் கேட்டுதான் புதிய முடிவுகள் எடுப்பார்.
அவர் சொல்லி நானும் வந்தேன்... அவர் சொன்னபடி செய்தேன்... அதிசயம் நடந்தது." என்றான் சிபி.

மீண்டும் உள்ளே அழைக்க, அவர் முன் அமர்ந்தனர்.

"உங்க பெற்றோர் விருப்பப்படி திருமணத்திற்கு ஒத்துக்கொளுளுங்கள்." என்று அவர் கூறவும் எழந்திரிக்கப்போனவனை இழுத்து அமரவைத்த சிபி,

" நீங்க சொல்லுங்க." என்றதும் சிரித்தபடி தொடர்ந்தார்.

"ஆனால் சில கண்டிஷன்கள் வைங்க! அந்தப் பெண் நிறைமதி கூறிய மூன்று பெயரில் ஒரு பெயர் வைத்து இருக்கும், ஜாதகமும் பொருந்தியுள்ள பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லுங்கள்."

"அப்படி சொன்னால்?" என்று மேகன் கேட்டதும்,

"அதிசயம் நடக்கும்! மீண்டும் நீங்கள் என்னை வந்து சந்திப்பீர்கள் நன்றி சொல்வதற்கு."

"அந்த மூன்று பெயருமே அவளுடைய உண்மையான பெயர் இல்லைங்க." என்றான் மனம் நொந்து,

"இறப்பதற்கு முன் பெரும்பாலும் யாரும் பொய் சொல்ல மாட்டார்கள். அவள் சொன்ன வரிகளை பாருங்கள்... நீ இல்லாமல் என்னிடம் உயிர் இல்லை! என்பதுதானே?"

"ஆமாம்!"

"உங்கள் பெயர் மேகன் அதாவது மேகம்... அப்போ அந்தப் பெண்ணின் பெயர் மேகத்தால் உயிர்வாழும் ஒரு பெயர், பூமி, வயல் என்பது போல்."

'அப்படியும் இருக்குமோ? ' என்று நினைத்தவன், "இதற்கும் என் கனவிற்கும் என்ன சார் சம்மந்தம்?" என்று மேகன் கேட்டான்.

"நீ இல்லாமல் அவளிடம் உயிர் இல்லை... இப்போ நீங்க இருக்கீங்களே! அவளிடம் உயிரில்லாமல் போய்விடுமா?"

"அவளுடைய கடைசி நிமிடங்களில் நான் இருந்தேன்"

"இங்கேதான் எனக்கும் குழப்பம்." என்றார்.

"இவரையும் குழப்பி விட்டாள்!"

"நான் சொல்வதை முயன்றுதான் பாருங்களேன்." என்றார்.

"இவர் என்னை வைத்து தான் ஆராய்ச்சி பண்றார் போல!" என்று நினைத்தவன்,

"அப்போ நாங்க கிளம்புறோம்!" என்று விடைபெற்றான்.

"உங்கள் கனவிற்கான விடை நான் சொன்னபடி நடந்தால் மட்டுமே கிடைக்கும். போயிட்டு நல்ல செய்தியுடன் வாங்க!" என்று விடை கொடுத்தார்.

"முயற்சி செய்து தான் பாரேன் டா... நீ ஒன்றும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டாம்.... அந்த மூன்று பெயர் உள்ள பெண்களை போய் தான் பாரேன்... "

"டேய்! அது பொய் பெயர் டா!"

நீ நம்பலைனாலும் எனக்காக முயற்சி செய்து பார்." என்று கூறினான்

மேகன் தன் நண்பனைப் பார்த்து சிரித்தான். பிறகு, "சரிடா இன்னும் ஒரு வருஷம் பார்ப்போம்... அதே கனவு மறுபடி மறுபடி வந்தா யோசிக்கலாம்...

மீண்டும் அந்த கனவு வருமா?

பொய்ப் பெயரால் அப்படி என்ன அதிசயம் நடக்கப்போகிறது?

அந்த மூன்று பெயரில், ஒருத்தி அவள் சாயலில் யாரும் இருப்பாளோ?

அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்

--------- ********* ---------





Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro