14

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கயலின் பார்வையில்..

நாளையில் இருந்து ஒரு மாதத்திற்கு இந்த ஊரில் இருக்க மாட்டோம். எல்லோரும் அவரவர் செல் போண்களை ஆப் செய்து விடுவதாக இப்போதே சபதம் செய்து கொண்டோம். எங்கே செல்வது என்று கடந்த இரண்டு நாட்களாக பேசி ஊட்டி செல்வதென்று தீர்மானித்தோம்.

எனக்கும் நிலாவுக்கும் ஒரே அறைதான். இருவருக்குள்ளும் என்றுமே இது உனது இது எனது என்ற சண்டை வந்ததேயில்லை. காரணம் நிலா எனக்காக எது வேண்டுமானாலும் செய்வாள். என்னுடன் கூடவே பிறந்தாலும் எனக்கு தங்கையானவள், பல சமயம் எனக்கு தாயாகவே இருந்திருக்கின்றாள். எனக்கு நிலாவிடம் சில விடயங்கள் பேச வேண்டியிருந்தது. அது என் வாழ்க்கை பற்றியது. நிலாவுக்காக எங்கள் அறையில் காத்திருந்தேன்.

குளித்துவிட்டு டவலைக் கட்டிக்கொண்டு வந்த நிலா, " கயல் வெளியில போ. நான் டிறஸ் மாத்தனும்" என்றாள். நிலாவிடம் இருக்கும் ஒரு பழக்கம், ஆடை மாற்றும் போது அவள் தனியாக இருக்க வேண்டும். பொதுவாக பெண்கள் மற்ற பெண்களின் முன் ஆடை மாற்ற  தயங்குவதில்லை. ஆனால் நிலா அப்படியல்ல. இதற்காகவே நான் அவள் குளித்துவிட்டு வரும் போது வேண்டும் என்றே எங்கள் அறையில் இருப்பேன்.

" ஹேய் வீட்ல என்ன பிரச்சினை போயிக்கிட்டு இருக்கு. உனக்கு இப்போ டிறஸ் மாத்தும் போது நான் இருக்குறதுதான் ப்ராப்ளமா. மூடிக்கிட்டு டிறஸ்ஸ மாத்து. அப்படி என்னதான் சீக்ரட் வெச்சிருக்கேன்னு நானும் பார்க்கனும். எப்ப பாரு வெளிய போனு சொல்லிக்கிட்டு" என்றேன். நிலா கோபமாகுவது தெரிந்தது. எனக்கு குளு குளு என்று இருந்தது. பொதுவாக நமக்கு மிகவும் பிடித்தவர்களை கோபமாக்கி பார்ப்பதில் இருக்கும் சந்தோசம் வேறு எதிலுமே இல்லை. ஒரு வகையான குரூர சந்தோசம் அது.

" இப்ப நீ வெளியில போகல, அப்புறம் உன்ன அடிச்சிடுவேன் கயல். தயவு செய்து வெளியில போ" என்றாள். எனக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. நான் அமைதியாக பதில் எதுவும் கூறாம இருந்தேன்.

" அப்பா, இந்த எருமை கயல வெளியில போகச் சொல்லுங்க. நான் டிறஸ் மாத்தனும்" என்று சத்தமாக அப்பாவிடம் புகார் கூற என்னால் அதற்கு மேலும் அறைக்குள் இருக்க முடியாது. எங்களின் தந்தை நான் சொல்வதை கேட்பார்தான். ஆனால் அதுவே நிலா ஏதும் கேட்டுவிட்டால் உடனே சம்மதம் சொல்லிவிடுவார். ஏனென்றால் அவள் என்னைப்போல எப்போதும் இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்க மாட்டாள்.

சற்று நேரம் கழித்து நிலாவுக்கும் சேர்த்து காபி தயார் செய்து கொண்டு அறைக்குள் சென்றேன். வெள்ளை நிற சுடிதாரில் நிலா அழகு தேவதையாகத் தெரிந்தால். நானும் அழகுதான், இருந்தாலும் நிலா முகத்தில் ஒரு குழந்தைத் தனம் இருக்கும்.

" ஏய் நிலா, உனக்கு மட்டும் எப்படிடி இப்படி சாந்தமான முக வெட்டு. என்ன பார்த்ததுமே எல்லோரும் சொல்லிடுறாங்க நான் வாயாடின்னு. இந்த சித்தார்த்தும் அதேதான் சொல்றான்" என்றேன். வேண்டும் என்றே சித்தார்த்தின் பெயரை இதற்குள் இழுத்துவிட்டேன். இன்றைக்கு அவனைப்பற்றி நிலாவிடம் பேசியாக வேண்டும். நான் சித்தார்த்தின் பெயரை கூறியதும் என்னை நிமிர்ந்து பார்த்தவள் அமைதியானாள். பதில் எதுவும் கூறுவாள் என நினைத்தேன், ஆனால் அவள் காபியை பருகுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தாள்.

" நிலா நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். இனிமே அப்பா எது சொன்னாலுமே கேட்கனும்னு. அம்மாதான் அவரு பேச்ச என்னைக்குமே கேட்டதில்ல. நீயும் நானும் கூட நமக்கு என்ன தேவைன்னுதான் சொல்லுவோமே தவிற அவரு சொல்லி எதுவுமே பண்ணதில்லை. உனக்கு தெரியும் எனக்கு சித்தார்த்த பிடிக்கும்னு. அவனுக்கும் என்ன பிடிக்கும்தான். பிடிக்கும் எங்குறத தாண்டி அடுத்த கட்டத்துக்கு நாங்க என்னைக்குமே போனதில்ல.

இவ்வளவு நாள் நான் உங்கிட்ட இது பத்தி பேசாம இருக்க காரணம், முதல்ல அப்பாகிட்ட எனக்கு சித்தார்த்த பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன். ஆனா இனிமே என் வாழ்க்கையில அப்பா விருப்பம் எதுவோ அதுபடியே வாழ போறேன். அவரு என்ன சொன்னாலும் அப்படியே கேட்டுக்க போறேன். நீயும் அப்படியே பண்ணுவியா? கண்டிப்பா நமக்கு கல்யாணம்னு வரும் போது அப்பா நல்ல மாப்பிள்ளையாத்தான் பார்ப்பாரு. அதுல எந்த சந்தேகமும் வேணாம். ஆனா அதே நேரம் நம்ம யாரையும் விரும்பினா கூட அவரு அதை எதிர்க்க மாட்டாரு. ஆனா மனசுல சின்னதா ஒரு வருத்தம் இருக்கும். நம்ம விருப்பப்படி நம்ம பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கலயேன்னு. இது எல்லா அப்பா, அம்மாக்கும் வரும். நமக்குதான் அம்மா இல்லை. நமக்கு விபரம் தெரிஞ்ச நாள் முதல் எல்லாமே அப்பாதான். அதனாலதான் நான் இந்த முடிவெடுத்திருக்கிறேன். நீ என்ன சொல்ற?" என்றேன்.

நிலா அமைதியாக இருந்தாள். அவள் அமைதியாக இருப்பதை கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் கேட்டதுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லையா? அல்லது நான் இப்படி பொறுப்பாக பேசுவேன் என்று அவள் எதிர்பார்க்கவில்லையா? எது என்று தெரியவில்லை.

" கயல் நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன். என் எதிர்காலம் என்ன என்பதை அப்பாதான் தீர்மானிக்கனும்னு. உனக்கு சித்தார்த்த பிடிக்கும்னு எனக்கு தெரியும். ஆனா நான் என்னைக்குமே அது பத்தி உன்கிட்ட கேட்டதில்ல. எனக்கு தெரியும், நீ வீட்ல ஏதும் சொல்லாம முடிவெடுக்க மாட்டேன்னு. ஆனா இப்போ நீ எடுத்திருக்க முடிவு பத்தி என்னால பதில் சொல்ல முடியல. ஏன்னா நீ அப்பா மேல இருக்குற பாசத்தையும் சித்தார்த் மேல இருக்குற.... என்ன காதல்னு சொல்லட்டா, இல்ல ஈர்ப்புனு சொல்லட்டா" என்று என்னைப் பார்த்து கண் அடித்தவள் மீண்டும் தொடர்ந்தாள்.

" சித்தார்த் மேல உனக்கு இருக்குற நெருக்கத்தையும் அப்பா மேல இருக்குற பாசத்தையும் போட்டு குழப்பிக்காத. அம்மா பண்ண செயல்களாக மனசு நிறைய வலிகள் இருக்கு. அதனாலதான் உன்னோட இந்த முடிவுன்னும் தெரியிது. ஆனா அதுக்காக இப்படி ஒரு முடிவ எடுத்துட்டு காலம் பூரா கவலைப்படுறதுல எந்த அந்த்தமும் இல்ல. உன் மனசுக்கு கொஞ்சம் டைம் கொடு. இன்னும் என்ன என்னாலம் நடக்கப் போகுதோ தெரியல. இப்போ எந்த முடிவும் எடுக்க வேணாம். என்ன சொல்ற" என்றாள். எனக்கு கோபம் வந்தது.

" எல்லாம் உனக்குத்தான் தெரியுங்குற மாதிரி பண்ணாத. நான் முடிவெடுத்தா எடுத்ததுதான். என் அப்பாவுக்காக சித்தார்த் என்ன உன்ன கூட விட்டுக்கொடுப்பேன். குடிச்சி முடிச்ச காபி கப்ப போய் முதல்ல கழுவு. பெரிய இவளாட்டம் அட்வைஸ் பண்ண வந்துட்டா" என்றேன்.

நிலாவுக்கு சிரிப்பு தாங்கவில்லை. " ஏன்டி நானா வந்து உன்கிட்ட கேட்டேன். நீதான் என்கிட்ட வந்து உன் மனசுல இருக்குறத சொல்லி என்ன பண்ணலாம்னு கேட்ட. உனக்கு போய் பதில் சொன்னேன் பாரு, என் புத்திய..." என்றவள் காபி கப்பை எடுத்துக்கொண்டு கிட்சன் சென்றாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro