அவளதிகாரம்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பெண்களுக்கென உரிதாய் ஒரு நளினம் உண்டு, வெட்கம் உண்டு. அழகு எனும் வார்த்தை பெண்பால் தானே. ஆனால் அவளிடத்தில் தென்படும் இந்த பெண்மை எல்லா சூழலிலும் வெளிப்படுவதில்லை. அவசியமான தருணங்களில் தன் சீற்றத்தையும் புத்திசாலித்தனத்தையும் காட்டுபவள் பெண், ஏன் சூனியம் கூட செய்பவள். காலேஜ் படிக்கும் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், அம்மாக்கள் ஆகியவர்களை wattpadஇல்
கண்டுள்ளேன். முன்பு கூறியதுபோலவே சினிமாவில் இடம்பெறும் நிஜத்தன்மை அற்ற நபர்கள் இங்கு தென்படுகின்றனர். ஆனால் முன்பு கூறிய "திருமணத்தை வெறுக்கும் இளைஞர்களுக்கு" வரமாய் அமையும் இந்த அப்பாவிகளை நீங்கள் காட்சிப்படுத்தியிருப்பது வருத்தம்.

சுட்டித்தனமும் குறும்பும் மட்டும் உடையவளாய் பெண்ணை சித்தரிப்பது அவளின் அறிவை மட்டம் தட்டுகிறது. Degree முடித்த பெண்களின் அறிவு எங்கே?

கணவன் வேலை முடிந்து வீடு வரும் வரை தினமும் காத்திருக்கும் பெண்கள் தான் உத்தமிகளா? கணவனுக்குக் காத்திருப்பதோடு அவளின் இல்வாழ்க்கை நகர்ந்திடுமா? தான் பிறந்து, தவழ்ந்து, பேசிய நான்கு சுவர்களை தாண்டி இன்னொருவரின் வீட்டுக்குள் வரும் பெண் மருமகள், மகள் அல்ல. தன் வீடு என்று உரிமைக் கொண்டாட முடியாமல் ஆனால் அங்கேயே தங்க வேண்டிய இக்கட்டான சூழல் ஆனால் பலரின் கதைகளில் ஏதோ சுற்றுலா வந்ததுபோல் மகிழ்ச்சியில் துள்ளுகிறாள் பலரின் கதாநாயகி.

ஆனால் அவர்களை விட்டுவிடுவோம். நமக்கு ஹீரோ தான் முக்கியம். கணவன் ஆபீஸிலிருந்து வந்ததும் மனைவியின் முகத்தில் மகிழ்ச்சி, இதன் பிறகு ஒரு ரொமேன்ஸ் சீன். ஆனால் உண்மையில் ஆபீஸில் என்ன நடக்கிறது என அறிய விரும்பும் அவளால் ஒன்றும் கேட்க முடிவதில்லை. இருவருக்குமிடையில் புரிந்துணர்வு கம்மி என்பது நிதர்சனம். கணவனின் மாத சம்பளத்தை முழுதாக அறியாத பெண்களே அதிகம், கேட்டால் உனக்கு என்ன தெரியும் என்ற எதிர்கேள்வி. தன் கணவன் வீட்டு சாமானுக்காகத் தரும் பணத்தில் மிச்சம் பிடித்து அதை தனக்காக சேமிப்பாய் வைத்திருக்கும் பெண்கள் 500 ரூபாய் செல்லா நோட்டாய் ஆனதும் மாத்த நின்றதைக் கவனித்திருப்பீர்கள். திருமணமான பெண்களில் சிலருக்கு வேலைக்கு போக வசதி கிடைத்தாலும் அவர்களும் இப்படி ஏதாவது எதிர்காலத்துக்கு சேமிப்பதும் தங்களின் எதிர்காலத்தை எண்ணி கவலைப்படுவதுமாய் இருக்கிறார்கள், ரோமேன்ஸ் கனவில் மட்டும் மிதக்காமல்.

திமிரான கதாநாயகியை ஹீரோ காதலித்து தன்பால் வசப்படுத்தி அவளின் பெண்மையை உணர்த்துவதுலாம் பெண்ணைக் கேவலப்படுத்துவது. ஒரு ஆண் தன்னை மேன்மையாகக் கருதுவது self-confidence என்றால் ஒரு பெண் தன் திறமைமேல் நம்பிக்கைக் கொள்வது திமிராகி விடுகிறது. துணிச்சலுடன் தவறை சுட்டிக்காட்டுவது திமிராகி விடுகிறது. இதில் ஹீரோ அவளை காதலால் அடக்குவது அவளின் சுயமரியாதையை தூற்றுகிறது. அவனிடத்தில் கனிபவள் அந்நியனிடம் காராராக பதிலளிப்பாள். இது திமிரல்ல.

வீட்டுக்குள்ளே பொத்தி வளர்க்கப்பட்ட கண்ணகி தான் குழல் அவிழ்ந்து தர்மத்துக்குக் குரல் உயர்த்தியவள். கண்ணகிக்கு சிலை உண்டே தவிர சீதைக்கு சிலை இல்லை. ராமாயணத்தில் ராமரே முக்கிய கதாபாத்திரம் ஆனால் சிலப்பதிகாரத்தில் அந்த அந்தஸ்து கண்ணகிக்கு வழங்கப்பட்டது. பெண்ணை முக்கிய கதாபாத்திரமாக அவளுடைய குரலிலிருந்து எழுதும்போது கஷ்டம், நஷ்டம், அநியாயம், கசப்பு, தவிப்பு, weakness என எல்லாவற்றையும் தன் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பெண்ணைக் குறிப்பிடுங்கள். இந்த மன திடம் அற்ற பெண் கதையில் முக்கிய கதாபாத்திரமாய் அமைய தகுதி அற்றவள். சீதைகள் ஓரத்திலே கனவுண்டு இருக்கட்டும்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro