23

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஒரு பெண்ணுக்கு தான் அழகு என்பது அவளுக்கு கர்வத்தை கொடுக்கும். ஆனால் அந்த கரவத்தை அவள் வெளியில் காட்டிக்கொள்ள முடியாது. அதே வேலை அவள் வீட்டில் இருக்கும் தாய், அக்கா, அண்ணி இவர்களில் ஒருவர் ஊர் போற்றும் அழகியாக இருந்துவிட்டால் போதும். அவள் அதை தன் தோழமைகளிடம் கூறி கூறியே அவர்களை வெறுப்பேற்றுவாள்.

' எங்கம்மா அழக அடிச்சிக்க ஆளே இல்லை, எங்கண்ணி செம்ம க்யூட், எங்க அக்கா கண்ணு செம்மயா இருக்கு' இப்படியான கூற்றுக்கள் மூலம் அவள் தன் கூட இருக்கும் தோழிகளை பொறாமை கொள்ள செய்து அதில் ஒரு வகையான திருப்தி காண்பாள். அதே போல தன் தோழி ஒருத்தியின் குடும்பத்தில் யாரும் ஒருத்தர் அழகாக இருந்தாளும் இவளுக்கு பொறாமை ஏற்படும்.

இங்கும் அதேதான் ஏற்பட்டது. சாரதாவின் அழகுகளை சொந்தம் கொண்டாடுபவள் ஜனனி என்பதை நினைக்கும் போது சங்கவி மற்றும் ஆனந்திக்கு பொறாமையாக இருந்தது. ஆனந்தி பொறுமையாக இருந்தாலும் சாப்பிட்டு முடித்ததும் தன் அக்காவை தனியாக அழைத்துச் சென்றவள் வாய்விட்டே கூறிவிட்டாள்.

" என்னக்கா இந்த டீச்சர் இப்படி இருக்காங்க. அவங்கள பார்த்தா இருபத்தைந்து வயதுக்கு மேல சொல்லவே முடியாதுள்ள. சூப்பர் அண்ணி ஒன்ன மிஸ் பண்ணிட்டோம்கா" என்று கூறியவளை ஆனந்தி முறைத்தாள்.

" லூசு மாதிரி உளறாத சங்கவி. யாரு காதுலயும் கேட்டுட போகுது. அதுவும் அண்ணன் காதுல கேட்டிச்சி அவ்ளோதான்"

" எது அண்ணன் காதுலயா? நீ வேறக்கா. அண்ணன் அந்த டீச்சர வெச்ச கண் வாங்காம சைட் அடிச்சத நான் கவனிச்சிக்கிட்டுத்தான் இருந்தேன். இந்த ஜனனி மட்டும் இல்லாம இருந்திருந்தா கல்யாணம் ஆனவங்கன்னு கூட பார்த்திருக்க மாட்டேன். அந்த மிஸ் கைல கால்ல விழுந்தாச்சும் எங்கண்ணன கட்டிக்குங்கன்னு கெஞ்சியிருப்பேன்"

" சரி சரி, ரொம்ப பேசாத. அப்புறம் அண்ணன் கிட்ட போய் எதையும் உளறி வைக்காத. அவன் எந்தப்பக்கம் சாய்றதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்கான். நீ ஏடாகூடமா எதையும் சொல்ல, என் தங்கச்சி சொல்லிட்டா, இனி எனக்கு என்ன பயம்னு புதுசா எதையும் கிளப்பிட போறான்" என்றாள். இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை ஒரு ஜீவன் மனதில் ரணத்துடன் கேட்டுக்கொண்டிருந்தது.

எல்லா வேலைகளும் முடிந்து அனைவரும் உறங்க சென்றனர். சாரதாவும் வித்யாவும் நாளைக்கு தேவையான திட்டமிடல்களை மேலேட்டமாக கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர். ஜீவா தன் தங்கைகளிடம் பேசிக்கொண்டிருந்தான்.

"இது உனக்கு சங்கவி" என்றவன் தன் கையில் அழகிய வேலைப்பாடுடன் பொதி செய்யப்பட்டிருந்த பரிசை கொடுத்தான். " இது உனக்கு ஆனந்தி" என்று ஆன்ந்திக்கும் ஒன்றை கொடுத்தான்.

" இது என் முதல் சம்பளத்துல வாங்கினது. அப்பாக்கும் சித்திக்கும் கூட எடுத்திருக்கேன். அப்பாகிட்ட கொடுத்திடுவேன். ஆனா சித்தி என்ன சொல்லுவாங்களோன்னு பயமா இருக்கு" என்று கவலைப்பட்டான்.

" அட லூசு அண்ணா, எங்கம்மாவ விடு. நான் இப்பவே இதை பிரிச்சி பார்க்கட்டுமா?" என்றவள் அவனின் பதிலை கூட எதிர்பார்க்காமால் பிரித்து பார்த்தாள். சற்று விலைகூடிய அழகிய கைக்கடிகாரம் ஒன்று இருந்தது. சங்கவிக்கு சந்தோஷம் தாளவில்லை. ஜீவாவை அணைத்தவள் அவனை முத்தமிட்டாள். சங்கவியிடம் இருந்து தங்கையாக முதல் முத்தம். ஆனந்தி அவனை ஒரு முறை முத்தமிட்டுருக்கின்றாள். ஆனால் அது தாய்மைக்கான முத்தம். பெண்களின் முத்தங்களில் கூட பல அர்த்தங்கள் உண்டு.

" அக்கா உன் கிப்டையும் பிரியேன் ப்ளீஸ்"

" இல்லா நான் வீட்டுக்கு போயே பிரிச்சிக்கிறேன்"

" அக்கா ப்ளீஸ் கா, என் செல்லம்ல. அண்ணா நீயாச்சும் சொல்லுண்ணா" என்று சங்கவி கேட்டாள்.

" அது அவ இஷ்டம். நான் அவள் போர்ஸ் பண்ண மாட்டேன்" என்று கூற சங்கவி அவனை பார்த்து முறைத்தாள்.

" மவனே, நாளைக்கு ஏதும் தப்பு தண்டா பண்ணிட்டின்னா சப்போர்ட்டுக்கு என்கிட்டதான் வரனும். இவ நியாயம் தர்மம்லாம் பார்ப்பா. நாந்தான் அதெல்லாம் பைபாஸ் பண்ணி போவேன். ஞாபகம் வெச்சிக்க" என்றவள் சட்டென்று ஆனந்தியின் கையில் இருந்த பார்சலை பறித்து பிரித்தாள். அவள் பார்சலிலும் அதே கைக்கடிகாரம். ஆனால் வேறு நிறத்தில். சங்கவிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. ஜீவா தன்னையும் ஆனந்தியையும் ஒரே போல நினைப்பது அவளுக்கு அளவிலா சந்தோசத்தை கொடுத்தது. உடனே அவள் ஆனந்தியை பார்த்து,

" பாருங்க மேடம் பாருங்க. அண்ணன் எனக்கும் உனக்கும் ஒரே மாதிரிதான் வாங்கியிருக்கு. கூடப்பிறந்திட்டா மட்டும் நீங்க அண்ணனுக்கு ரொம்ப முக்கியம்னு நினைச்சிக்கிட்டு இருந்தீங்கள்ள. அது பொய்யின்னு அண்ணன் நிரூபிச்சி காட்டிட்டிச்சி" என்றாள்.

" லூசு நான் எப்போ அப்படி சொன்னேன். நான் உனக்கு அக்காண்ணா என் அண்ணா உனக்கும் அண்ணாதானேடி" என்று ஆனந்தி கூறினாள்.

" இல்ல நீ அப்படி நினைச்சிருப்பேன்னு நான் நினைச்சேன். நீதான் ஊமைக் குசும்பாச்சே. சோ அண்ணனுக்கு நீயும் நானும் ஒன்னுதான். ஐ ஆம் வெரி ஹாப்பி எனக்கு இது போதும்" என்றவள் அந்த கைக்கடிகாரத்தை தன் கைகளில் வைத்து அழகு பார்த்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

இங்கு ஜீவாவும் ஆனந்தியும் தனியாக இருந்தனர்.

" அண்ணா அவ ஏதோ சும்மா உளறிட்டு போறா. நான் அப்படி எதுவுமே அவகிட்ட சொல்லல"

" சேச்சே அப்படி எதுவும் தப்பா நான் நினைக்கள்ள. நான் உன்னையும் அவளையும் ஒரே மாதிரி பார்ப்பேன்னு நினைச்சிருக்க மாட்ட அதனாலதான் அவ ரொம்ப எக்சைட்டாகிட்டா போல"

"வாட்ச் ரொம்ப அழகா இருக்குண்ணா"

" தாங்க்ஸ்மா. படிப்பெல்லாம் எப்படி போகுது"

" ஒரு ப்ராப்ளமும் இல்லைன்னா. ஆனா சங்கவிதான் ஒழுங்கா படிக்க மாட்டேங்குறா. என்ன பண்றதுன்னு தெரியல. அன்னைக்கு கூட சித்தி இவள நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டாங்க"

" இந்த வயசுல அதெல்லாம் சகஜம்தான். சித்திக்கிட்ட சொல்லு ரொம்ப யோசிக்க வேணாம்னு. இருந்தாலும் அவ மேல ஒரு கண்ணு வெச்சிக்க. அவகூட டைம் ஸ்பெண்ட் பண்ணு. அவ ஏதும் சொல்ல வந்தான்னா காது கொடுத்து கேளு. ஏன்னா இந்த வயசுல அவங்க சொல்றத நம்ம காது கொடுத்து கேட்கலைன்னா அப்புறம் அவங்க பேசுறதுக்கு வெளியில ஆள் பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க" என்றான்.

" கண்டிப்பான்னா, முடிஞ்சவரைக்கும் அவகூட டைம் ஸ்பெண்ட் பண்றேன்"

" அப்புறம் ஆனந்தி, உங்கண்ணி எப்படி இருக்காங்க" என்று கேட்க ஆனந்தி அவனை கேள்வியாக பார்த்தாள். அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவன் " அதான் சாரதா மிஸ் எப்படி இருக்காங்கன்னு கேட்டேன். அழகா இருக்காங்கள்ள" என்றான்.

" ஆமாண்ண ரொம்ப அழகா இருக்காங்க. ஆனா அழகா இருக்காங்கன்னதுக்காக எல்லாம் எங்கண்ணனுக்கு அவங்கள கட்டி வைக்க முடியாதே" என்று கூற ஜீவாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சில வார்த்தைகள்தான் ஆனந்தி பேசினாலும் அவனுக்கு நெற்றிப்பொட்டில் அடித்தால் போல் தனது கருத்தை கூறிவிட்டாள். ' எனக்கு அண்ணியா வர போறவ, அழகா இருந்தா மட்டும் போதாது' என்பதுதான் அந்த கருத்து.

எல்லோரும் சென்றபின் ஜீவா அவர்கள் தங்கி இருந்த வீட்டின் ஹாலில் தூங்கினான். அது மூன்று அறை கொண்ட வீடு என்பதால் பெண்கள் எல்லோரும் அந்த அறைகளில் தங்கிக் கொண்டனர். அவனுக்கு உறக்கம் வரவில்லை. மாறாக யோசனை அதிகமாக இருந்தது.

ஆரம்பத்தில் சாரதா யார் என்று தெரியாமல் அவள் மீது அபிப்ராயம் வந்தது என்னமோ உண்மைதான். ஆனால் அவள் ஒரு பெண்ணுக்கு தாய் என்பது தெரிந்ததும் அவன் அபிப்ராயம் மீது அவனுக்கே கோபம் வந்தது. ஆனால் அதன் பின் நடந்த விடயங்கள், சாரதாவின் வாழ்க்கை என்பவற்றை கேட்ட போது தான் ஊர் விட்டு ஊர் சென்று வேலை செய்வதற்கான காரணம், கடவுள் தன்னிடம் இருந்து ஏதோ ஒன்று எதிர்பார்க்கின்றார் என்பதை புரிந்துகொண்டான். அது சாரதாவுக்கான மறுவாழ்க்கையா அல்லது ஜனனிக்கு ஒரு ஆறுதலான தோழமையா? எது என்பது அவனுக்கு சரியாக புலப்படவில்லை.

வீட்டிற்கு வந்த ஆனந்திக்கு ஜீவா கடைசியாக கேட்ட கேள்வி மீண்டும் மீண்டும் அவள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

' உங்கண்ணி எப்படி இருக்காங்க' அந்த கேள்வியை அவன் கேட்டபின் அவன் முகத்தில் தெரிந்த மலர்ச்சியை அவள் கவனிக்காமல் இல்லை. ஜீவாவுடன் அவள் பெரிதாக எதுவும் பேசிக்கொண்டதில்லை என்றாலும் ஜீவாவை பற்றி அவளுக்கு அணு அணுவாக தெரியும். அவனது ஒவ்வொரு அசைவிலும் இருக்கும் காரணத்தை அவள் இலகுவில் உணர்ந்து கொள்வாள். அவன் கேட்ட கேள்வியில் இருந்து அவள் புரிந்து கொண்ட ஒரே விடயம் ' சாரதா எப்படி இருந்தாலும் அவள் மீது எனக்கு ஒரு பிடிப்பு உள்ளது' என்பதுதான். இதற்கு தான் என்ன செய்ய வேண்டும் என்று எண்ணி எண்ணியே ஆனந்தியின் தூக்கம் தொலைந்தது.

அதே நேரம் சங்கவிக்கோ ஜனனியின் மீது பொறாமையாக இருந்தது. பெண்களே பொறாமை கொள்ளும் அழகைக் கொண்ட சாரதா, தனக்கு மிகவும் பிடித்த அண்ணன் இருவரின் பாசமும் அவளுக்கு கிடைப்பது சங்கவிக்கு ஒரு வகை எரிச்சலுடன் கூடிய பொறாமைத் தீயை மூட்டியது. அந்த தீ விட்ட ஜுவாலையினால் அவளின் தூக்கமும் தொலைந்தது.

இங்கு ஜனனிக்கும் தூக்கம் தொலைந்திருந்தது. அதன் காரணம் அவள் மட்டுமே அறிவால். அவளின் தூக்கத்தை தொலைய காரணமான விடயம் அவள் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருந்தது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro