லஞ்ச் நேரம். ஜனனியும் ஜீவாவும் எதிர் எதிரில் அமர்ந்திருந்தனர். வெளியில் மழை, மழலையின் சிரிப்பு போல சாந்தமாக பொழிந்து கொண்டிருந்தது. இருவர் உடலிலும் கால நிலை காரணமாக குளிர் பரவிக் கொண்டிருந்தது. அந்தக் குளிருக்கு இதமாக இருக்க ஜீவா இருவருக்கும் காபீ ஆடர் செய்தான்.
" என்ன எதுவுமே பேசாம இருக்க" என்று ஜனனியை பார்த்து புன்ன்கையுடன் ஜீவா கேட்டான்.
" நொன்ன பேசாம இருக்கேன். எங்கம்மா கால் பண்ணி எங்க கூட டூர் வா என்று சொன்னா, நீ என்னமோ வியாக்கியானம் பேசுற". ஜனனி இப்போதெல்லாம் ஜீவாவிடம் செல்லச் சண்டை, குட்டி கோபம் எல்லாம் போடுவாள். அது அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அது நிஜ கோபம் இல்லை என்பது அவனுக்கு தெரியும். ஆனால் இப்போது அவளின் கோபம் உண்மையாக இருந்தது.
" ஜனனி கூல். கொஞ்சம் மெதுவா பேசு. பக்கத்துல இருக்குறவங்களுக்கு கேட்டுட போகுது. அப்புறம் இந்த பொண்ணு என்னடா அவ சார வா, போன்னு கூப்பிடுறான்னு யோசிக்க போறாங்க" என்று கூற அவனை தீர்க்கமாக பார்த்தாள்.
" ஓஹ் அப்படியா ஜீவா சார். சாரி சார். நீங்க ஏன் சார் எங்க கூட டூர் வரமாட்டேன்னு சொன்னீங்க சார்" என்று கூற காபியை குடித்துக் கொண்டிருந்த ஜீவாவுக்கு சிரிப்பு வர புரை ஏறியது.
" அம்மா தாயே, நீ பேசாம எப்பவும் போலவே கூப்பிடு" என்றவன்
"ஆல்ரெடி குமார் சார் வர்றதுதானே ப்ளான். நடுவுல நான் வந்தா நல்லா இருக்காது ஜனனி"
" யோவ் பெரிய இது மாதிரி பேசாத. அந்த கருவாயன் வந்தா எனக்கு என்ன சந்தோசம். அவனும் அவன் மண்டையும். நீ வர்ற. அவ்ளோதான். இந்த ஜனனி சொன்னா அதுக்கு மறு பேச்சில்ல. குமார் சார எங்கம்மா பார்த்துக்குவாங்க" என்றவள் அவனின் பதிலுக்கு கூட காத்திராமல் காபீக்கு காசு கொடுக்க சென்றாள். எப்பவும் ஜீவாவே அவர்கள் இருவரும் உண்பதற்கு காசு கொடுப்பான். ஆனால் இன்று ஜனனி காசு கொடுத்து விட்டு மறுபடி அவர்கள் இருந்த மேஜைக்கு வந்தாள்.
" என்னடா இன்னைக்கு இவ காசு கொடுத்திருக்கான்னு யோசிக்கிறீங்களா சார்? வேற ஒன்னுமில்ல. எங்க கூட டூருக்கு நீங்க வரலைன்னா இனிமே நான் தனியாதானே இருக்கனும். அதுக்குத்தான் இப்பவே பழகிக்கிறேன்" என்றவள் அங்கிருந்து சென்றாள்.
ஜனனியின் கோபம் ஜீவா இதுவரை அவன் வாழ்வில் கண்டிராத ஒன்று. அவனின் மூத்த தங்கை அவனிடம் அதிகம் பேசியதில்லை. இளையவள் இப்போது சில காலமாகத்தான் அவனுடன் சகஜமாகப் பேசுகின்றாள். அவனிடம் இப்படி உரிமையாக அதட்டி யாரும் காரியம் சாதித்ததில்லை. ஜனனியின் செயல்கள் அவன் உள்ளத்த்தை புலகாங்கிதம் அடையச் செய்தது.
" ஹலோ மிஸ், நேத்தைக்கு நீங்க என்னையும் டூருக்கு கூப்பிட்டீங்கள்ள. யோசிச்சி பார்த்தேன், போறது எங்க ஊரு. உங்க கூட நான் இருந்தா உங்களுக்கு ரொம்ப ஒத்தாசையா இருக்கும்னு தோனுது"
" கண்டிப்பா ஜீவா, அதேதான் நானும் யோசிச்சேன். குமார் சார் கிட்ட நான் பேசிக்கிறேன். சொல்லப்போனா அவருக்கு இந்த டூர் வர்றதுக்கு இஷ்டமேயில்ல. வேற யாரும் இல்லாததாலதான் அவர கூப்பிட வேண்டியதா போச்சி".
சாரதாவுக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. இது கண்டிப்பாக ஜனனியின் வேலைதான் என்பது அவளுக்கு தெரியாமல் இல்லை. இருந்தாலும் அவள் ஜீவாவை இப்படி பயப்படவைப்பதை நினைக்கும் பொழுது ஒரு பக்கம் சந்தோசமாகவும் மறுபக்கம் கொஞ்சம் பயத்தையும் கொடுதது. ஆனால் இது இரண்டுமே ஏன் தோன்றியது என்ற அவளுக்கு காரணம் புலப்படவில்லை.
வீட்டிற்கு வந்த ஜனனியிடம் சாரதா, "இன்னைக்கு ஜீவா சார ஒரு வழி பண்ணிட்ட போல" என்றாள்.
" ரொம்ப பண்றான்மா. டூருக்கு வரமுடியுமான்னு கேட்டா வர வேண்டியதுதானே. ஏதோ சாக்கு சொல்றான். அதான் சின்னதா ஒரு பிட்ட போட்டேன். அதுக்கே அவன் பயந்துட்டான்"
" வார்த்தைக்கு வார்த்த அவன், இவன்னு பேசாத ஜனனி. அது நல்லா இல்லை. நான் கேட்டா ப்ரெண்ட்ஸ்குள்ள நாங்க அப்படித்தான் பேசிப்போம்னு சொல்லுவ. இருந்தாலும் அவரு வயசுக்கு ஒரு மரியாதை கொடுக்கனும்ல. தனியா நீங்க பேசிக்கும் போது எப்படி வேணா கூப்பிட்டுக்க. ஆனா மத்தவங்ககிட்ட பேசும் போது மரியாதை கொடுத்து பேசுமா. அதுதான் அழகு" .
சாராதா கூறுவது ஜனனிக்கு சரி என்றே தோன்றியது. தான் செய்வது மட்டும்தான் சரி என்று கூறும் ரகம் ஜனனி கிடையாது. மற்றவர்கள் கூறுவதையும் காது கொடுத்து கேட்பாள். ஆனால் கடைசி முடிவு என்னமோ அவள் இஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது சாரதா கூறியது ஜனனிக்கு சரி என்றே தோன்றியது.
" சாரிம்மா. மத்தவங்க முன்னாடி இனிமே அப்படி கூப்பிட மாட்டேன்" என்றாள்.
எப்போதும் கலகலப்பாக இருக்கும் வித்யா அன்று ரவீந்தர் வந்து சென்ற பின் அவள் மனது சிறிது சஞ்சலமாகவே இருந்தது. ரவீந்தர் செய்தது தவறுதான். ஆனால் ஒரு தவறை சரி செய்ய தானும் இன்னொரு தவறை கையில் எடுத்தது அவளை வாட்டியது. ரவீந்தர் என்னதான் அவளை வார்த்தைகளால் கொடுமைப்படுத்தி இருந்தாலும் இன்னொரு பெண்ணிடம் அவன் என்றுமே சென்றதில்லை. அவனுக்கு எப்போதுமே வித்யாதான். ஆனால் சித்தார்த்துக்கு காலேஜில் வித்யாவை காதலிக்க முன் இரண்டு காதல் இருந்தது அவளுக்குத் தெரியும்.
டூர் நாளும் வந்தது. பதினைந்து மாணவிகளுடன் சாரதா, வித்யா மற்றும் ஜீவாவும் சென்றனர். அவர்கள் சென்ற பஸ் அல்லோலகல்லோல்ப் பட்டது. இரண்டு பெண்கள் சேர்ந்தால் அந்த இடம் எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியும். அதிலும் பதினைந்து நவநாகரீக மங்கைகள். கலாட்டாவுக்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் சாரதா மற்றும் வித்யாவும் கூட இவர்களின் கலாட்டாவில் ஐக்கியமானார்கள். ஆனால் ஜீவாவால் பெண்களுடன் அப்படி இருக்க முடியவில்லை. முடியவில்லை என்பதை விட தெரியவில்லை.
காலையில் ஆரம்பித்த பயணம் ஒரு வழியாக இரவு தங்குவதற்கு ஜீவாவின் ஊரை வந்தடைந்தது. இவர்கள் தங்க ஜீவாவின் வீட்டிற்கு அருகிலேயே காலியாக இருந்த ஒரு வீட்டை ஆனந்தி ஏற்பாடு செய்திருந்தவள் இரவுக்கான உணவை அவள் தன் சித்தியிடம் கூறி அவர்களே தயாரித்தனர். ஆனந்தி, வள்ளி, சங்கவி மூவரும் ஒரு ஆட்டோவில் எல்லோருக்குமான உணவை எடுத்துக் கொண்டு டூர் வந்தவர்கள் தங்கும் வீட்டை அடைந்தனர்.
" வாங்கம்மா, நீங்கதான் ஜீவாவோட அம்மாவா?" என்று வள்ளியை பார்த்து வித்யா கேட்க அவரும் புன்முறுவளுடன் தலையசைத்தவர் வித்யாவுடன் கதை அளக்க ஆரம்பித்தார். ஆனந்தி மற்றும் சங்கவி இருவரும் சாரதாவை காண ஆவளாக இருந்த வேலை அவர்கள் முதலில் கண்டது ஜீவாவுடன் அரட்டை அடித்து சிரித்துக் கொண்டிருக்கும் ஜனனியைத்தான். இவர்களுக்கு ஜனனி என்ற ஒரு நபர் இருப்பது தெரியும். ஆனால் அது இவள்தான் என்று தெரியாது. இருவரும் அவர்கள் அருகில் செல்ல ஜீவா இவர்களை கண்டு கொண்டான்.
" என் அருமை தங்கச்சிங்களா எப்படி இருக்கீங்க" என்று கேட்க ஆனந்தியும் சங்கவியும் " நல்லோர்க்கம்ணா" என்றனர். அதன் பின் ஆனந்தி பெரிதாக எதுவும் பேசவில்லை. போனில் அவனுடன் பேசுபளுக்கு நேரில் பொதுவாக பேச நா எழவில்லை. ஆனால் சங்கவி அதற்கு மாற்றமாக நான் ஸ்டாப்பாக பேசிக் கொண்டே இருந்தாள்.
ஒரு கட்டத்தில் அங்கு ஜனனி இருப்பதை மறந்த சங்கவி " உங்காளு, அதான் உங்க ஸ்கூல்லயே ப்யூட்ட்ட்ட்ட்ட்ட்டி குயீன் எங்க. அவங்களும் கூட வர்றாங்கன்னு சொன்ன" என்று கேட்க ஜீவா ஸ்தம்பித்து நின்றவன், சங்கவியிடம் கண்களால் ஜனனி இருப்பதை ஜாடை காட்டினான். தான் செய்த தவறை உணர்ந்த சங்கவி அமைதியாக நிற்க ஜனனி இவள் பேசியதை பெரிதாக எடுத்துக்கொண்டது போல தெரியவில்லை.
எல்லோரும் ஒன்றாக உணவருந்த ஆரம்பித்தனர். ஆனந்தி மற்றும் சங்கவி இருவரும் வீட்டுலேயே சாப்பிட்டு விட்டதால் இங்கு அவர்களே எல்லோருக்கும் பரிமாறினர். எல்லோரினதும் தேவைகளையும் முடித்த பின் சாரதா குளித்து அப்போதுதான் அங்கு வந்தாள். வெள்ளை நிறத்தில் ஊதா நிற பார்டர் வேலைப்பாடு செய்த சுடியை அணிந்து வந்த சாரதாவை ஆனந்தியும், சங்கவியும் வாய் பிளந்து பார்த்தனர். சாரதாவை நேரில் பார்க்கும் முதல் தருனம் அவர்களுக்கு. சாரதாவின் குடும்பப் பாங்கான அழகு அவர்களை அப்படியே அவளின் பக்கம் சாய்த்தது. ஜனனியின் அருகில் உட்கார்ந்தவள் ஆனந்தி மற்றும் சங்கவியை பார்த்து புன்னகைத்தாள். இருவரும் மரியாதை நிமித்தம் புன்னகைக்க ஜீவா அவர்கள் இருவரையும் சாரதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
" என் பேரு சாரதா. தமிழ் டீச்சரா இருக்கேன். இது என் பொண்ணு ஜனனி" என்று கூற ஆனந்தியும் சங்கவியும் ஜனனியை பொறாமையாக பார்த்தனர்.
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro