பாகம் 40

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


Date published: 27 October 2023
Word count: 2527

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

ஹலோ! மிஸ்டர் சாம்பமூர்த்தி?"

தனது பர்ஸனல் கைபேசியில் வந்த அழைப்பை ஏற்றார் மூர்த்தி.
"ஆமாம் நீங்க?"



"சார் நான் ரங்கநாதன்..R & M Associates, Construction Manager. உங்க பையனோட பாஸ்...."


"யெஸ் யெஸ்... ஞாபகம் இருக்கு சார். அந்த மால் ப்ராஜெக்ட்ல ரெய்ட் நடந்தப்ப மீட் பண்ணது. தாங்க்யூ அர்ஜுனுக்கு நல்ல வழிகாட்டியா இருக்கீங்க சார். சொல்லுங்க how can I help you?"



"உங்களை மீட் பண்ண முடியுமா? பர்சனல் தான். உங்களுக்கு எப்ப ஃப்ரீனு சொல்லுங்க.."



"நோ ப்ராப்ளம் நான் இப்ப வீட்டுக்கு தான் கிளம்பறேன். நீங்க சொல்லுங்க உங்க ஆபிஸ் அல்லது வெளியிடம் எங்க வேணுமானாலும் சந்திக்கலாம்."


" நான் ஆக்ச்சுவலா உங்க ஆபிஸ் இருக்கற ஏரியால தான் இருக்கேன். இங்க பக்கத்துல ஹோட்டல்?"


அருகில் இருந்த ஒரு உயர்மட்ட காபி ஷாப்பில் சந்தித்தனர் இருவரும். கார் பார்க்கிங்கில் எதிர்கொண்டு பரஸ்பர நல விசாரிப்புகள் முடிந்து உள்ளே சென்றதும் சிப்பந்தி எதிர்கொண்டு சற்றே தனிமை சூழல் கொண்ட ஒரு டேபிளில் அமர்த்தினார்.

மெனு கார்ட்டை ரங்கநாதன் முன்பு பிரித்து வைத்த சிப்பந்தி
"Sir, your usual order?"
மூர்த்தியிடம் வினவினார்.

"சில நேரங்கள்ல..."


"I know Mr Moorthy, எல்லா official விஷயங்களும் ஆபிஸ்ல பேச முடியாது..."


காபி டீ என தேவையானவற்றை ஆர்டர் செய்தபிறகு பேச்சை தொடங்கினர்.


"சார் எனக்கு பூர்வீகம் திருச்சி. பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில தான். காரணம் அப்பா பிரிட்டிஷ் சர்க்கார் உத்தியோகஸ்தர். என் கூட பிறந்தவங்க அஞ்சு பேர்.



என் மனைவி private bank manager. எனக்கு ஒரு பையன் டாக்டர், MD Cardiology முடிச்சு இப்ப மதுரை பக்கம் கிராமத்துல சர்வீஸ்ல இருக்கான். ஒரு பொண்ணு, M.sc மாத்ஸ் 1st year பண்றா."


முகத்தில் எந்த அறிகுறியும் காட்டவில்லை மூர்த்தி எனினும் இந்த தகவல் பரிமாற்றம் எதற்கு என யோசித்தது அவரது மூளை.


"மூர்த்தி சார்" சிப்பந்தி அவர்களது ஆர்டரை எடுத்து வரவும் மூர்த்தியின் சிந்தனை ஓட்டம் நின்றது.



"என் பயோடேட்டா உங்க கிட்ட ஷேர் பண்ண காரணம். என் மகளை விஸ்வநாதனுக்கு கட்டி குடுக்கணும்னு ஒரு ஆசை."


இன்பமாக அதிர்ந்தார் மூர்த்தி.

"அர்ஜுனை எனக்கு ரெண்டரை வருஷமா தெரியும். அவன் மூலமா உங்க family background பத்தி ஒரு ஐடியா இருந்தது.
இப்ப உங்க அண்ணன் பையனை தினம் ஆபிஸ்ல பாக்கறேன்.



அவரோட குணம், பண்பு, லேடி ஸ்டாப் மத்தியில காட்ற கண்ணியம்.. சுருக்கமா சொன்னா ஒரு தகப்பன் தனக்கு மாப்பிள்ளையா வரவன்கிட்ட எதிர்பார்க்கற அத்தனை குவாலிட்டீஸும் அவர்கிட்ட இருக்கு."


ரங்கநாதன் பேச பேச, மூர்த்திக்குள் அப்படி ஒரு பூரிப்பு, பெருமிதத்தில் விரிந்தது அவரது நெஞ்சம்.



"ரொம்ப நன்றி. அவன் என் அண்ணன் புள்ளைன்னாலும் அவனை எங்க மூத்த புள்ளையா தான் நானும் என் மனைவியும் நினைச்சு வளர்த்திருக்கோம் சார்.



சூடான தேநீரை அருந்தி, தொண்டையை செருமி பேசத்தொடங்கினார் மூர்த்தி.

"என் அண்ணன் அருணாச்சலம் என்னை விட மூணு வயசு பெரியவர். எங்க அப்பா, அவங்க அப்பா, பாட்டன் எல்லாம் மிராசுதார், தஞ்சாவூர் பக்கம். ரொம்ப கண்டிப்பான, கடுமையான ஆளு எங்க ஐயா - I mean அப்பா."

"புரியுது சார், நாங்களும் ஐயான்னு சொல்லுவோம் தான் இங்க சிட்டில பலருக்கு புரியாது.."



"ம்ம்ம்... அவரோட கண்டிப்புனாலையா இல்லை இயல்பிலேயோ அண்ணனுக்கு குடும்பம் சம்சார வாழ்க்கைனு ஈடுபாடு இல்லை."

ரங்கநாதன் சற்றே யோசிக்க

"அச்சோ தவறா நினைக்காதீங்க. அவருக்கு பகவான் ரமணரோட சீடராக ஆசை. ஆன்மீகம், மக்கள் சேவை அப்படின்னு ஸ்கூல் காலேஜுக்கு லீவு போட்டு பொது சேவை, உழவார பணி செய்ய போயிடுவாரு.
கட்டாயபடுத்தி தான் அப்பா கல்யாணத்தை பண்ணிவச்சாங்க."

நீண்ட பெருமூச்செறிந்து,
"அண்ணன் சந்நியாசம் வாங்கி இப்ப குடும்பத்தை விட்டு நிரந்தரமா பிரிஞ்சு போயி கிட்ட தட்ட ஆறு வருஷம் இருக்கும். ஆனா ஆரம்பத்துலேருந்தே ஒரு மாதிரி விலகி தான் இருந்தாரு. அதனால நான் விஷ்வாவுக்கு தகப்பன் இடத்துல இருந்து என்னால ஆனதை செய்துட்டு இருக்கேன்.


மிடில் கிளாஸ் குடும்பம் நாங்க. எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு. பசங்களையும் அப்படி தான் வளர்த்துருக்கேன்.

கூட்டு குடும்பமா தான் இருக்கோம், இருப்போம். இதுல நோ காம்ப்ரமைஸ். வர மருமகள்களுக்கு இது தான் ஒரே கண்டிஷன். என்ன ஆனாலும் குடும்பம் உடைய கூடாது.


இது தான் எங்க குடும்பத்தோட நிதர்சனம். உங்க மகளுக்கு கூட்டு குடும்பம்னா சங்கடம்..."


"என் கூட பிறந்தது மூணு அண்ணன், ஒரு அக்கா, ஒரு தம்பி. அக்கா அமெரிக்கா வாசி, ரெண்டாவது அண்ணன் சிங்கப்பூர். மீதி எல்லாரும் ஜாயிண்ட் ஃபேமிலியா தான் இருக்கோம். Only son அப்படீன்னு பெருமையா சொல்ற வரன் எல்லாத்தையும் தட்டி கழிக்கிறது அவ தான்."



கைபேசியில் இருந்த தனது குடும்ப புகைப்படத்தை காட்டினார்.



"இது என் பொண்ணு, பேரு ஷாலினி. போட்டோ, ஜாதகம் வேணும்னா அனுப்பறேன். வீட்டுல கலந்து பேசிட்டு சொல்லுங்க".

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

"என்ன தான் பா உன் பிரச்சனை? ஒளிவு மறைவு இல்லாம பேசு தம்பி. உன் அம்மாவுக்கு ஓய்வு தேவை, அவளை அன்பா அக்கறையா கவனிச்சுக்க ஆள் தேவை."


"அம்மாவுக்கு முடியலைன்னா நான் வீட்டு வேலை செய்யறேன், சித்தி ஹெல்ப் பண்றாங்க. இப்ப அம்மாவுக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை. தேவைப்பட்டா நர்ஸோ சமையலுக்கு ஆளோ அப்பாயிண்ட் பண்ணலாம் சித்தப்பா. இதுக்கு போய் கல்யாணம் செஞ்சுக்க முடியுமா? இன்னும் சொல்லப்போனா இவங்களுக்கு குடுக்கற சம்பளம் கொஞ்சம் சீப்பா முடியும்.." லேசான தோள் குலக்கலோடு அவன் பேசியவிதம் அர்ஜுனுக்கும் யமுனாவுக்கும் சிரப்பை வரவழைத்தது.



விஷ்வா முகத்தில் எந்தவொரு எதிர்வினையும் காட்டாமல் இருந்தாலும் உள்ளுக்குள் தவித்தான்.


"விஷ்வா நான் ஒரு மணி நேரமா பொறுமையா பேசிட்டு இருக்கேன் நீ என்ன விளையாட்டு காட்ற? எல்லாம் இவனால வந்தது" அர்ஜுனை நோக்கி சீறினார்.


"இது எந்த ஊர் நியாயம்?"
எதிர்த்து பேச தொடங்கிய அர்ஜுனை அடக்கிவிட்டு விஷ்வா பேச்சை தொடர்ந்தான்.


"இப்ப அவனை ஏன் சித்தப்பா திட்றீங்க? இப்ப இந்த கல்யாண பேச்சு எதுக்கு? நான் தான் மெட்ராஸ் வரும்போதே சொன்னேனே அம்மாவுக்கு உடம்பு நல்லா ஆகணும். எனக்கும் கேரியர்ல ஒரு நல்ல பொசிஷன் வந்துட்டேன்னு தோணும்போது தான் கல்யாணம் பத்தி பேசலாம்னு..."


"நீங்க பொறுப்பில்லாம ஆயிரம் பேசுவீங்க டா. நல்லது கெட்டது எல்லாம பெரியவங்க தான யோசிக்கமுடியும்.
அது அது ஆகவேண்டிய வயசுல ஆகவேண்டாமா விச்சு? இருபத்திஏழு ஆக போகுது பா. மூத்தவன் நீ இருக்கும்போது இவனுக்கு கல்யாணம் பண்றது மனசுக்கு ஒப்பலை டா. நாலு பேர் கேள்வி கேட்டா.."



"இப்ப கேள்வி கேக்கற அதே நாலு பேர் அர்ஜுன் கல்யணம் தள்ளி போனாலும்...
நிச்சயம் பண்ணிட்டு சுகந்தியை காக்க வைக்கிறோம்னு பேசுவாங்க. இவங்க பேச்சுக்கெல்லாம் நீங்க ஏன் இம்பார்ட்டென்ஸ் குடுக்கறீங்க?"



ஆயாசமாக இருந்தது விஷ்வாவிற்கு. உற்றார் உறவினர் என்ற பெயரில் உபத்திரவம் செய்பவர்களே அதிகம் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறது அவர்கள் குடும்பம்.



"உண்மைய சொல்லுங்க சித்தப்பா நீங்க சித்தியை கல்யாணம் பண்ணிகிட்டப்போ இந்த நாலுபேருக்கு பயந்தா வாழ்க்கையை ஆரம்பிச்சீங்க? இல்லையே! இப்ப மட்டும் என்ன?"

"வயசாகுதே டா.. உடம்புல மனசுல தெம்பு இருக்கும்போதே பிள்ளைங்க நல்லபடியா செட்டில் ஆகிட்டா சந்தோஷம் தானே?


அதோட நம்ம சொந்தகாரங்களே என்னை கேள்வி கேக்கறாங்க காது பட பேசுறாங்க. அண்ணி வாயில்லா பூச்சின்னு ஏய்க்கிறான் பா.. தகப்பன் இல்லாத புள்ளைனு இவனுக்கு இளக்காரம்.."


விருட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்தான்
விஷ்வா. அவனது கோபத்தின் வெளிப்பாடாய் நாற்காலி கிறீச்சிட்டு நகர்ந்து தள்ளாடியது.


"உங்களை இப்படி கேள்வி கேட்டது யாரு? எப்ப கேட்டாங்க?"

யமுனாவின் முகம் வருத்தத்தை வெளிப்படுத்தியது. திருமணம் போன்ற குடும்ப விழாக்களை மையமாக வைத்து சில உறவினர்கள் இப்படி கலகங்களில் ஈடுபடுவதும், அவதூறு பரப்புவதையும் கொள்கையாக வைத்திருப்பது மிக வேதனையான போக்கு.


"அர்ஜுன் எங்கேஜ்மெண்ட்ல தான? நினைச்சேன்! ஏன் சித்தி நீங்க கூட சொல்லலை.

யாரு அந்த பெரிய மனுஷி கலகம் பண்ணிட்டு போச்சா? அது குடும்பத்தோட பவுசு வெட்ட வெளிச்சமாயிட்ட ஆங்காரத்துல பத்த வச்சிருக்கும். யாரு சொன்னாங்கன்னு சொல்லுங்க நான் பேசறேன்.."



"அன்னிக்கு தான் என்னென்னவோ நடந்து போச்சே டா தம்பி. இதை பத்தி சுத்தமா மறந்து போச்சுங்கறது தான் டா உண்மை"

யமுனா முடிந்தவரை அவனுக்கு மனவருத்தம் ஏற்படுத்தாமல் நாசுக்காக பதிலளித்தார்.

அன்று நடந்தவை அனைத்தும் மின்னல் வேகத்தில் கண்முன் தோன்றி மறைந்தது. பூரணியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற நேரத்தில் தான் விழாவிற்கு வந்திருந்த உறவினர் வரம்பு மீறி பேசியிருந்தனர் மூர்த்தியையும் யமுனாவையும்.


ரத்தம் கொதித்தது விஷ்வாவிற்கு.
ஆழ்ந்து பெருமூச்செறிந்தான்.

"இப்ப அதுவா டா முக்கியம்?"


வறண்ட சிரிப்பொன்றை உதிர்த்தான்.
"இத்தனை வருஷம் எங்களை பத்தி நினைக்க கூட நேரம் இல்லாதவங்கலாம் எங்களை பத்தி கவலை படுறதா சொல்றது வேடிக்கையா இல்லை சித்தப்பா?


அதோட உங்களை கேள்வி கேக்க இவங்களுக்கு என்ன அருகதை? என்ன தைரியம்? சித்தி டிகிரி முடிச்சதையும் நீங்க அவங்களுக்கு சப்போர்ட் பண்றதையும் பாப்பா இறந்து போனதுக்கு முடிச்சு போட்டு பேசின முட்டாள் ஜனங்க இவங்க. அந்த நேரத்துல எவ்வளவு காயப்படுத்தினாங்க உங்க ரெண்டு பேரையும்... வெறும் கெட்ட எண்ணம் பிடிச்சவங்க."
வெறுப்பை உமிழ்ந்தான் விஷ்வா.



தம்பியிடம் பதிலை எதிர்பார்த்து அவன் புறம் திரும்பியது அவன் கவனம்

"யார்ரா பேசினது? ஏன் டா நீயும் சொல்லலை?"

"எனக்கே கொஞ்ச நாள் முன்னாடி அம்மா ஓட்டை வாயை வச்சிட்டு புலம்பும் போது தான் தெரியும்"

யமுனா அவன் முதுகை பதம் பார்க்க,
"ஸ்ஸ்...ஆஆ... இதுக்கு மட்டும் ரோஷம் வருதாக்கும்"


"நம்ம சின்ன தாத்தாவோட பையன் தான் டா"
விஷ்வா முகத்தில் குழப்ப ரேகைகள்.

"அதான்டா நம்ம கொள்ளு தாத்தாவோட இரண்டாம் தாரத்து மகன். நம்ம தாத்தா உசிரா நினைச்ச தம்பியோட பையன். முத்துராயன் சித்தப்பா. கிராமத்துல உக்காந்து நாப்பது வருஷமா மிராசுதார் வாரிசுன்னு பேரை வச்சிட்டு அலப்பறை பண்ணிட்டு, பாட்டன் வீடு, சொத்துல பங்குன்னு சினிமா ஸ்டைல்ல இம்சை குடுத்துட்டு இருக்காறே அந்த புண்ணியவான் தான்."


"அர்ஜுன் நீ வேற... சும்மா இரேன் டா" யமுனா அங்கலாய்த்தார்.



"என் வாயை அடைக்கறதுல புருஷன் பொண்டாட்டிக்கும் என்ன ஒத்துமை டா சாமி" நொடித்துக் கொண்டான் அர்ஜுன். "இங்க எங்கிட்ட மட்டும் தான் ருத்ரமூர்த்தி.. அவரு சொந்தக்காரங்கன்னா பம்மல் மூர்த்தி.."
தந்தை அவனை முறைக்கவும் பேச்சை நிறுத்திக்கொண்டான்.


"டேய் நீ வாடா அர்ஜுன் ரெண்டுல ஒண்ணு கேட்டுட்டு வந்துர்லாம்.."

"டேய் கண்ணா உக்காரு இப்படி" மூர்த்தி அவனை கையமர்த்த முயல அவன் பிடிவாதமாய் நின்றான்.

"ப்ச்.. உக்காருன்னு சொல்றேனே" அவன் தோளில் அழுத்தம் கொடுத்து அவனை அமர்த்தினார் மூர்த்தி. அர்ஜுன் எழுந்து தான் அமர்ந்திருந்த நாற்காலியை தந்தையை நோக்கி நகர்த்தினான்.


அவன் கைகளை பற்றிக்கொண்டு பேசத் தொடங்கினார் மூர்த்தி
"மத்தவங்க பேச்சை விடு. இது எனக்கே உறுத்தலா இருக்குப்பா. உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைஞ்சு, நீயும் நல்லா சந்தோஷமா இருக்கணும்னு அப்பா நான் நினைக்க கூடாதா டா? கல்யாணமே வேண்டாம்ன்னு முடிவாய்யா? தலைமுறை தலைமுறையா நடந்துட்டு வர மாதிரி நீயும்..."

வாஞ்சையாய் அவன் தலைலயை கோதினார். வருத்தம் ஆட்கொள்ள அவரது குரல் கம்மியது. எப்படி பேசினாலும் இளக மறுக்கும் விஷ்வாவை நினைத்து கவலை கொண்டார் மூர்த்தி.


"உங்க விருப்பம், வருத்தம் எல்லாம் நியாயம் தான் சித்தப்பா நான் மறுக்கலை. இப்ப கல்யாணம் வேண்டாம்ன்னு தான் சொல்றேன்"
அவனது குரலும் வருத்தம் தோய்ந்து வெளிப்பட்டது.


"உங்களையோ சித்தியவோ வருத்தப்பட வைக்கணும்னு எனக்கு எண்ணம் இல்லை. பயப்படாதீங்க, நேரம் வரும்போது கல்யாணம் பண்ணிப்பேன். சந்தோஷமா?"



"ரெண்டு பேர் கல்யாணத்தையும் ஒரே முகூர்த்ததுல வைச்சா ஒரே செலவா போயிடுமில்ல டா.."

அவருடைய விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்பது விஷ்வாவின் முகத்தில் பூத்த சிரிப்பை வைத்து யூகிக்க முடிந்தது.

"ம்க்க்கும்" கிராமத்து கிழவிகளை போல நையாண்டியாக தாடையை தோளில் இடித்து நையாண்டி செய்த அர்ஜுன், "ஆசையை பாரூடி ஆத்தா, இது ஆரு டி இடத்தை குடுத்தா மடத்தை புடுங்கறவேன்?"


அனைவரும் சற்றே மனம் லேசாகி சிரித்தனர்.

"சித்தப்பா இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை? சரி.. உண்மையை சொல்லுங்க யாராச்சும் கல்யாண ப்ரபோசலோட உங்களை சந்திச்சாங்களா? மறுக்க முடியாத நல்ல வரன். எனக்கு நல்லது பண்றதா நினைச்சு மல்லு கட்றீங்க இல்லை?
ஏன் சித்தப்பா பொய் சொல்றீங்க"

தடுமாறிய மூர்த்தி, சற்றே கறாரான குரலில்,
"ஆமா டா.. அதனால என்ன இப்ப? ஏன் உன்னை பத்தி யோசிக்க எனக்கு உரிமை இல்லை? நான் பெத்த அப்பா மாதிரின்னு தான சொல்ற?"


"கவுத்துட்டியே நைனா" தலையில் அடித்துக் கொண்டான் அர்ஜுன்.
"ஏம்பா கல்யாணம் அவனோட விருப்பம்..."


" நீ குறுக்க பேசாத அர்ஜுன் சொல்லிட்டேன். இது அவன் வாழ்க்கை சம்பந்தபட்டது"

"அதை தான நாங்களும் சொல்றோம்.." மகன்கள் இருவரும் கோரஸாக முழங்கினர்.


சற்றே நிதானித்து, "தம்பி உன் பாஸ் ரங்கநாதன் சார் அவரோட மகளை உனக்கு கட்டிவைக்க விருப்பட்றார்."


இந்த திடீர் திருப்பத்தை எதிர் பார்க்கவில்லை அர்ஜுனும் விஷ்வாவும். மாலை ரங்கநாதன் அவரை சந்தித்து பேசியது பற்றி மூர்த்தி விளக்க, தத்தளித்தான் விஷ்வா.

"நாம எதிர்பார்க்கறதும் அந்த மாதிரி கூட்டு குடும்பத்துக்கு ஒத்து போற பொண்ணா தான? அதுவும் உன்னை உடனே கட்டிக்க சொல்லலை டா. பொருத்தம் பாக்கணும், பிறகு பொண்ணை பாத்து, உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா மட்டுமே மேல பேச்சு."

பேச்சற்று போயினர் மற்ற மூவரும்..

"இதோ பாரு. அண்ணிகிட்ட நான் காலையில பேசி உன் ஜாதகம் வாங்கறேன்..'

"வேண்டாம். எனக்கு விருப்பம் இல்லை" விஷ்வாவின் உள்ளே பிரளயம் வெடித்துக் கொண்டிருந்தது. சிரம் தாழ்த்தி முகத்தில் மாறுதல் காட்டாமல் இருக்க முயன்று கொண்டிருந்தான்.

"ஜஸ்ட் ஜாதகம் டா.."

அவரை பேசவிடாமல் இடைவெட்டினான் விஷ்வா.

"எனக்கு விருப்பம் இல்லை சித்தப்பா. நான் இப்ப தான் வேலையில சேர்ந்திருக்கேன். இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. புரிஞ்சுக்கோங்க."
இறுகிய முகத்தோடு எழுந்தான்.


பூரணியின் ஒப்புதல் இன்றி வீட்டில் அவர்களது காதல் பற்றியோ திருமணம் பற்றியோ பேச்சை எடுப்பதில்லை என முன்பே முடிவு செய்து அவளிடம் வாக்கும் அளித்திருந்தான். இப்படி ஒரு இக்கட்டில் வாழ்க்கை அவனை தள்ளும் என எதிர் பார்க்கவில்லை அவன். வாயிற் கதவை அவன் நெருங்கவும்,


"விஸ்வநாதா..."
மூர்த்தியின் அதட்டலான குரல் ஒரு வித நடுக்கத்தை ஏற்படுத்த சடக்கென நின்றான்.


'கடவுளே! காதலா குடும்பமான்னு ஏன் இந்த இக்கட்டுல தள்ளுறீங்க மறுபடியும்? நான் பூரணியை திரும்ப இழக்க முடியாது. சித்தப்பாவை நோகடிக்கவும் முடியாது.'


" நீ யாரையாவது லவ் பண்றியா?"அனைவரும் திடுக்கிட்டனர். "சொல்லு டா"

மனைவியை நோக்கி அனல் பார்வையை வீசினார்.


"ஏன் யமுனா எதா இருந்தாலும் சித்து சித்துனு உன்னை தான மொத தேடுவான். உனக்கு தெரிஞ்சிருக்குமே.. சொல்லு"

அவரின் அதட்டலில் சர்வமும் தந்தியடித்தது யமுனாவிற்கு.

"உன் புள்ளையை கேக்க முடியாது, ரெண்டு பேரும் கூட்டு களவாணிங்க..."

மூர்த்தியின் முதுகுக்கு பின்னிருந்து சொல்லாதே என சைகை செய்த மகன்களை பார்த்துவிட்டு கணவனை மிரட்சியோடு பார்த்தார்.


"ஓஹோ! அவனுங்க என் முதுகுக்கு பின்னாடி நாட்டியம் ஆடுறானுங்களோ? அப்ப என் சந்தேகம் ஊர்ஜிதமாயிடுச்சு... வாங்கடா இந்த பக்கம்."

மூவரையும் ஒரே நேர்கோட்டில் தன் கண்பார்வையில் நிறுத்தினார். அமைதி, தயக்கம், பயம், பதட்டம் என கலவையான உணர்வுகள் நிறைந்திருந்தது அறையில்.

'அம்மா அபிராமி! என்ன இவர்கிட்டேந்து காப்பாத்து... நாலு வெள்ளிக்கிழமை உனக்கு பொங்கல் படையல் வைக்கிறேன் தாயி. இன்னிக்குன்னு பிரஷர் மாத்திரையை வேற கரெக்ட்டா இவரு தான் எடுத்து குடுத்தாரு இல்லைனா தலைசுத்துறா மாதிரி ஆக்டிங்காவது குடுக்கலாம்..'

"யமுனா.. மனசுக்குள்ளாற கடவுளை வேண்டுறதை நிறுத்து. பதில் வந்தாகணும் இப்ப"
யமுனா மென்று விழுங்கினார்.

"விஸ்வநாதா உன் அமைதிக்கு என்ன அர்த்தம்?"

கைகளை பின்பக்கம் கட்டி அதிகாரத் தோரணையில் நின்றிருந்தார் மூர்த்தி.


'எப்ப பாத்தாலும் அக்யூஸ்டு கிட்ட பேசற நினைப்புலையே இருக்கவேண்டியது. நல்லவேளை இவரு போலீஸ் ஆகலை..'

"டேய் மைண்ட் வாயஸ் off பண்ணுனு உனக்கு தனியா சொல்லணுமா?"

"எல்லா சைடும் gate போட்டா என்ன பண்றது?" முணுமுணுத்தபடி அர்ஜுன் தலை கவிழ்ந்தான்.

"பதில் வரலைனா நான் நாளைக்கே பொண்ணு பாக்க சம்மதம்னு சொல்லிடுறேன்" கைபேசியை எடுத்தார் ரங்கநாதனை அழைக்க.

"ஆமா..."


"நினைச்சேன். யாரு?"

பேச மறுத்தான். என்ன சொல்வது? எப்படி சமாளிப்பது? தெரிந்தால் விளைவுகள் எப்படி இருக்கும்? என்ன நடந்தாலும் சரி பூரணியின் அனுமதியின்றி அவன் ஒரு வார்த்தை பேசுவதில்லை என்பதில் தீர்மானமாக இருந்தான்.


ஆனால் சித்தியால் மூர்த்தியின் கோபத்தை தாக்குப்பிடித்து அமைதி காக்க முடியாமா என்பதும் சந்தேகம்.


"ஏன்டா இவ்வளவு பேசறேன் கொஞ்சமாச்சும் மரியாதை இருக்கா? பதில் பேச கூட முடியாத அளவுக்கு பெரிய மனுஷனாகிட்டியா? கொஞ்ச நேரத்துக்கு முன்ன எனக்காக சப்போர்ட் பண்ணி பேசறேன்னு கிளம்பினியே அது வேஷமா டா?"

"அப்பா என்ன இது கோபத்துல என்ன வேணா பேசுவீங்களா" கடிந்து கொண்டான் அர்ஜுன்.

"வாயை மூடு அர்ஜுன். உங்கிட்ட கேள்வி கேட்டா மட்டும் பதில் சொல்லு" மகனை அடக்கிவிட்டு


"விஷ்வா நீ பேச மறுக்கிறதை நான் என்னன்னு எடுத்துக்குறது?"


"சித்தப்பா உங்க எல்லாரோட உணர்வுகளை மதிக்கற மாதிரி அந்த பொண்ணோட உணர்வுகளுக்கு மதிப்பு குடுக்கறேன். நாங்க இப்ப வீட்டுல இதை பத்தி பேசுறது இல்லைன்னு தீர்மானம் பண்ணியிருக்கோம்.


"என்ன காரணம்? எப்ப பேசுறதா உத்தேசம்?"


அடுத்தடுத்த கேள்விகள் எதுவாக இருக்கும் என ஒரளவு யூகித்துவிட்ட விஷ்வா நிதானமாக பதிலளித்தான்.
"அவ வேலைக்கு போய், குடும்பத்தை கொஞ்சம் stabilise பண்ணணும். அதன் பிறகு.."


"அவ கூட பிறந்தவங்க?"

"அவ ஒரே பொண்ணு"


"ஓஹோ? அம்மா அப்பா?"

"இருக்காங்க. ரொம்ப சாதாரணமான நடுத்தர வர்கத்தை சேர்ந்த குடும்பம்.."



"இல்லை, அவங்க என்ன வெட்டியாவா இருக்காங்க? இவ வேலைக்கு போய் சம்பாதிச்சு தான் குடும்பம் ஓடணுமா? பொம்பளை புள்ளை சம்பாத்தியத்துல வாழறாங்களா? "


சுருக்கென்றது விஷ்வாவிற்கு. ஆனால் மூர்த்தியின் எண்ணப் போக்கு புரியாதவன் இல்லை அவன். மூர்த்தி அரசாங்க அதிகாரி அவதாரத்தில் தான் இத்தனை நேரமும் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்திருந்தான்.

அதிகாரிகளுக்கே உரித்தான போக்கு இது. தன்மானத்தை தாக்கி கோபத்தை தூண்டும் விதமாக பேசி உணர்ச்சிவசப்படுவதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு உண்மையை கறந்து விடுவார்கள்.

"அப்பா என்ன இது பத்தாம் பசலித்தனமான பேச்சு? சுகந்தி பூரணி ஷர்மிளா எல்லாரையும் வேலைக்கு போய் independant ஆக இருக்க ஊக்குவிக்கற நீங்களா இப்படி பேசறது? நம்ம வீட்டு பொண்ணுக்கு ஒரு நியாயம் அடுத்தவீட்டு பொண்ணுக்கு ஒரு நியாயமா?"
அர்ஜுன் பொரிந்து தள்ளினான்.


"நீ பொங்கறதை பாத்தா உன் அண்ணி யாருன்னு உனக்கு தெரியுமோ? அந்த பெண்ணை சொன்னா உனக்கு ஏன் ரோஷம்?"
மகனை ஆராய்ந்தார்.


"சித்தப்பா.. உங்க கேள்வி கொஞ்சம் அநாகரீகமா இருக்கு. நீங்க அக்யூஸ்டுக்கு யூஸ் பண்ற லாங்க்வேஜ் இது. விஜிலன்ஸ் அதிகாரி சாம்பமூர்த்தியா இல்லாம, மூர்த்தி சித்தப்பாவா கேள்வி கேட்டா நான் பதில் சொல்ல தயார்"



"குடும்பத்தோட financial status என்னன்னு தெரிஞ்சுக்க அந்த கேள்வி.. அந்த பொண்ணு யாரு, பெத்தவங்க என்ன செய்யறாங்க? நல்ல குடும்பமாங்கிறது தான் என்னோட கேள்வியின் நோக்கம். ஹும்.. சரி..."


அவரது கேள்வி படலம் தொடர்ந்தால், ஒவ்வொரு பதிலும் பூரணி தான் என கோடிட்டு காட்டிவிடும் என்பது உறுதி. தவித்தான் விஷ்வா.

"பொண்ணு எந்த ஊரு? அவங்க குலம், கோத்திரம்.." விஷ்வா சடக்கென நிமிர்ந்தான்.
"குலம் கோத்திரம் தெரியாம எப்படி டா ஒத்துக்க முடியும்?"

"உங்களை ஒத்துக்க சொல்லலை சித்தப்பா.."

அரைவினாடி கூட தாமதியாமல் வந்தது பதில். சலிப்பும், பயமும் கலந்த மனநிலையில் இருந்த விஷ்வா பேசிய பிறகே உணர்ந்தான் தனது தவறை.

அதிர்ந்து நின்றிருந்தனர் அனைவரும்.

"அச்சோ ஸாரி சித்தப்பா... மனிச்சிருங்க சித்தப்பா நான் நான் எதுவும் mean பண்ணலை. இப்ப அதை பத்தியே பேசப்போறது இல்லை, அதனால ஒப்புதல் பற்றி இப்ப பேசவேண்டாங்கற அர்த்தத்துல சொன்னேன்.

சித்து ஸாரி சித்து நான் அப்படி எதுவும் சொல்லை சித்து.."

அவர்கள் கரங்களை பற்றிக் கொண்டு கண்ணீர் மல்க மன்னிப்பு வேண்டினான்.

மேலும் கீழுமாக தலையசைத்து பெருமூச்செறிந்தார் மூர்த்தி.

"ம்ம்ம்ம்... உன் மனசுலேருந்து வந்த வார்த்தைகளா இல்லை implusive ஆக வந்த வார்த்தையா தெரியலை..

ஆனா அந்த பெண்ணை பத்தி பேச்செடுத்ததும் உன் நடவடிக்கையில இப்படியொரு மாற்றம்."

யோசனையாக முன் நெற்றியை தேய்த்தார்.

"Is this her influence? இது அந்த பொண்ணோட தாக்கமா? உன்னை அந்த பொண்ணு மாத்திடுச்சோனு பயமா இருக்கு"

விக்கித்து நின்றான் விஷ்வா. தன் கோபத்தால், அவசரத்தால் பூரணிக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் நிலை. இருதலை கொள்ளி எறும்பாய் தவித்தான்.

"சித்தப்பா ப்ளீஸ்.." குரல் கரகரக்க கண்ணில் கண்ணீர் தளும்ப அவரிடம் மன்றாடினான் "இது... அவ.. அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்லை. இப்ப நடந்தது என்னோட தவறு. It was slip of the tongue. அதுக்காக நான் முழூ மனசோட மன்னிப்பு கேட்கறேன். அவளை பத்தி தெரியாம தயவு செய்து முடிவு எடுத்துராதீங்க."

நாற்காலியில் அமர்ந்து கொண்ட மூர்த்தி, "Guilty until proven innocent. அந்த பெண்ணை பத்தி தவறான முடிவுக்கு நான் வரக்கூடாதுன்னா அவளை பத்தி எனக்கு தெரியணும் இல்லையா?"

மிகச்சரியாக செக் வைத்தார்.
பதில் கூற இயலாமல் அவர்கள் அனைவரும் ஸ்தம்பித்து நின்றிருக்க,



"அந்த பொண்ணு அவங்க வீட்டுல உன்னைப் பத்தி சொன்னா அவங்களும் நீ நல்லவனா இல்லையானு கேள்வி கேட்பாங்க தான?"


அழுத்தமாக வந்து விழுந்தன அடுத்த வாக்கியங்கள், உள் அர்த்ததோடு.

"கேட்கணும். நல்ல தாய் தகப்பன்னா கேட்கணும். விசாரிக்கணும். விசாரிச்ச மாதிரி தெரியலையே... இல்லை நீ வீட்டோட மாப்பிள்ளைனு அங்க சரண்டர் ஆகிட்டியோ? "

"ஏங்க என்ன பேச்சு பேசறீங்க? நீங்க? இவன் நம்ம புள்ளைங்க..."

"அந்த நம்பிக்கைல தான் யமுனா நானும் இருந்தேன். டெல்லி போனதும் உன் புள்ளை மாறிட்டான் போல."


"அவ தமிழ் பொண்ணு தான்.. உங்க பாஷைல சொன்னா அவங்க நம்ம ஆளுங்க தான். போதுமா? ஒண்ணு ரெண்டு வருஷம் டைம் தான நான் உங்கள்ட்ட கேட்டேன்."

"சரிப்பா நானும் டைம் குடுக்கறேன்.. இப்ப அர்ஜுன் சுகந்தி சமாச்சாரம் தெரியவந்தப்ப எல்லாரும் கூடி பேசினோம், முதல்ல செட்டில் ஆகட்டும்னு டைம் குடுத்தோம் இல்லையா? அது மாதிரி அவளையும் அவ பெத்தவங்களையும் மீட் பண்ணி பேசிட்டு, டைம் குடுக்கறதை பத்தி பேசலாம். என்ன சொல்ற யமுனா?"

அமைதி நிலவ அவரே தொடர்ந்தார்.

"என்னடா இதுக்கும் ஒத்து வர மாட்டியா? அந்த பொண்ணுக்கு போன் போடு. உனக்கு நான் வேற பொண்ணு பாக்கறேன்னு சொல்லு.. அப்ப ஒத்துக்குவா இல்லை?"

யோசனையில் ஆழ்ந்தான் விஷ்வா.


"இங்க பாரு, உனக்கு ரெண்டு மணிநேரம் டைம். பேசிட்டு சொல்லு. இல்லை... நாளை மறுநாள் ரங்கநாதன் வீட்டுக்கு பொண்ணு பாக்க போறோம்."

"என்னங்க ப்ளாக்மெயில் பண்ற மாதிரி இருக்கு. அந்த ரங்கநாதன் பொண்ணு என்ன ஓடியா போகுது? அதென்ன..."


மூர்த்தி ஆவேசமாக கையை ஓங்கியபடி எழுந்து நிற்க, பயத்தில் இரண்டடி பின்னோக்கி நகர்ந்தார் யமுனா.


"வாயை மூடு. இல்லை அறைஞ்சு பல்ல பேத்துருவேன். நீ குடுக்கற செல்லம் தான் இவனுங்களுக்கு"


"அப்பா.."


"சித்தப்பா.. என் மேல இருக்கற கோபத்தை சித்தி மேல ஏன் காட்டுறீங்க? என்ன இது மிருகதனமா?" யமுனாவை அரவணைத்து கொண்டனர் மகன்கள் இருவரும்.

ஆங்காரமாய் அவர்களை தள்ளிவிட்டார் யமுனா.

"விடுங்கடா... என்ன உங்களுக்கு பிரச்சனை இப்ப? உங்க புள்ளை காதலிச்சான் ஒத்துகிட்டீங்க. இவன் காதலிச்சா தப்பா? அவன் என் அக்கா புள்ளை. என் வளர்ப்பை விட அவ வளர்ப்பு உசத்தி. வைரம்ங்க இவன்.. இவனை போய் சந்தேகப்படுறீங்க? உங்க அண்ணன் இருந்தா அவனை நீங்க இந்த பேச்சு பேச முடியுமா? உங்க கால்ல விழுந்து கும்பிடுது இந்த புள்ளைனு உங்களுக்கு அகம்பாவம்"


"சித்தி வேண்டாம் எனக்காக நீங்க சண்டை போடாதீங்க ப்ளீஸ்"

அவனை வெறித்து பார்த்தார் யமுனா.


"ஏன்டா எத்தனை வருஷம் இப்படியே அடுத்தவங்களுக்காக உன்னை உன் ஆசைகளை கட்டி வெச்சிட்டு இருக்கபோற?"


"நீங்க சொன்ன ஒரே காரணத்துக்காக basketball விளையாடுறதை விட்டு ஆர்க்கிடெக்கட் படிச்சான். இப்ப கூட நமக்கு சண்டை வேணாம்னு அழுவுது இந்த புள்ளை" அடக்கமாட்டாமல் தேம்பினார் யமுனா.


"அக்மார்க் முத்திரை குத்தற மாதிரி நீங்க ஒப்புதல் கொடுத்தா தான் உங்களை சுத்தி எதுவுமே நடக்கணும்னு நினைக்கிறது எந்தவிதத்துல நியாயம்? உங்க அப்பாவோட சர்வாதிகார புத்தி உங்களுக்கும் இருக்குனு புரியுதா இல்லையா?


அப்படி என்ன தப்பு நடந்துபோச்சுனு ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதிக்கறீங்க? அவன் விரும்பறது நம்ம பூரணியை தான். இப்ப என்ன பண்றதா உத்தேசம்?"

தலையில் இடியை இறக்கியது போல உணர்ந்தான் விஷ்வா. மூவரில் யாரேனும் ஒருவர் இப்படி உணர்ச்சிவசப்பட்டு உண்மையை போட்டு உடைக்கவேண்டும் என்பதே மூர்த்தியின் இந்த தாண்டவத்தின் நோக்கம். அது நிறைவேறிவிட, வீட்டில் மயான அமைதி.



Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro