💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-06

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

எத்தனை வருடங்கள் இவனின் அழைப்பில் உள்ளம் குளிர்ந்திருப்பாள்.

எத்தனை நாள் இவனின் இந்த அழைப்புக்காக ஏங்கி தவித்து இன்புற்றிருப்பாள்.

எத்தனை நாட்கள் தாங்கள் இருவரும் வாழப்போகும் எதிர்காலத்தை நினைத்து கனவு கண்டிருப்பாள்.

எல்லாவற்றையும் தன் காதலோடு சேர்த்து குழியில் புதைத்தவனை இன்னும் தன் மனம் முழுமையாக மறக்கவும் வெறுக்கவும் முடியாமல் திணறுவதை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை.

இருந்தும் அவன் முகம் காணா இடத்தில் இருக்கிறோம் என்று நிம்மதியாக இருந்தாள்.

இருந்த போதும் விதி அவர்களை ஒரே கோட்டில் எதிர் எதிரே நிறுத்தி வைத்து பார்த்ததில் சற்று ஆட்டம் கண்டிருந்தாள்.

தங்கள் வாழ்வில் தான் நினைத்து பார்க்காத சம்பவங்கள் எல்லாம் நடந்து முடிந்திட... இன்று அவனுக்கென்று ஒரு குழந்தையும் இருக்கிறது.

அவன் மகிழ்ச்சியாய் வாழாமலா குழந்தை பேறு பெற்றிருப்பார்கள்?? என்று உள்ளம் உள்ளம் புழுங்கினாள்.

அவனை வெறுக்கிறேன் என்கிறாய் இன்று அவன் குரலினால் உன் மேனியில் மாற்றங்கள் ஏற்படுகிறதே... இதற்கென்ன அர்த்தம்?? என்றும் அவளின் உள்ளம் ஏகத்தாளமாய் கொக்கரிக்க...

இன்னும் வார்த்தைகள் இல்லாத நிகழ்படங்கள் போல் அவளின் எண்ணங்கள் சிறகை விரித்து எங்கெங்கோ பறந்து கொண்டிருக்க,

அவளின் எண்ணங்களை அவனின் குரல் கலைத்தது.

இவளின் மௌனம் வருணை கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது.

"தியா!" என்றான் பயம் கலந்த மெல்லிய குரலில், அவளின் விழிகள் விரிந்து சப்தநாடியும் ஒரு நொடி அடங்கிற்று. இதற்கு மேல் வலிகளை தாங்கவோ பழைய நினைவுகளை கிளறவோ விரும்பாமல் அலைபேசியைத் துண்டித்தாள்.

இவர்கள் இருவர் மட்டும் அறிந்த இவர்களின் உறவை யாரும் அறியாமல் இருப்பதே நலம் என்று முடிவு செய்தவள்.

'நான் இருக்க இடம், என்னோட நம்பர் எல்லாம் தெரிஞ்சு இனி சும்மா இருக்க மாட்டார். அதனால நாளைக்கே இந்த வேலையை ரிசைன் பண்ணிட்டு முதல்ல இங்க இருந்து போகணும். இந்த நம்பரையும் மாத்தனும்' என்று அலைபேசியை வெறித்து கொண்டே இருந்தவள். அலைபேசியை அணைத்து வைக்க கரங்கள் பரபரத்தது.

அந்நேரம்,

"யாரும்மா போன்ல?" என்றபடி பழச்சாறை எடுத்து வந்தார் கேசவனின் மனைவி.

அவரை கண்டதும் புன்னகைத்தவள்.

"என் பிரென்ட் மா. உடம்பு எப்படி இருக்குன்னு கேட்டா?" என்றாள்.

"ஒஹ் சரி மா. நீ சரியா சாப்பிடறதே இல்ல போல? ரொம்ப இளைச்சு போயிருக்க. போக போக ஆள் இன்னும் உள்ள போய்ட்டே தான் இருக்க. என்ன உன் கவலை?" என்றார் வாஞ்சையாய் அவளின் தலையை வருடியபடி.

"எனக்கென்னம்மா கவலை? அதெல்லாம் எதுவுமில்லை." என்று கைகடிகாரத்தை பார்த்தவள்.

"சரி மா. நான் கிளம்புறேன். கொஞ்சம் வெளியே போகணும்" என்றாள்.

"உன்னை வாசப்படி கூட தாண்ட விடகூடாதுன்னு உங்கம்மா ஸ்ட்ரீக்ட் ஆர்டர் போட்ருக்காங்க." என்றார் புன்னகையோடு.

"அயோ! ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்துட்டீங்களா?" என்று சிரித்தாள்.

"ஆமா உணக்கு ரெண்டு அம்மா. அப்போ கெடுபிடியும் அதிகமா தான் இருக்கும்" என்றார்.

இங்கே வந்து இருக்கும் நாட்களில் தன் அன்னைக்கு அழைத்து பேசும் பொழுது கேசவனின் மனைவியும் தாரணியின் அம்மாவும் நன்கு பேசி பழகி நெருங்கிய தோழிகளாயினர்.

எதுவாயினும்  இருவரும் பேசிக்கொண்டனர்.

தான் இல்லாத பொழுது தன் மகளை அவ்வப்பொழுது கவனித்து கொள்ளும் இவர் மேல் அவருக்கு அலாதி பிரியம் உண்டு.

மீண்டும் தாரணியின் அலைபேசி அடிக்க, "யாரும்மா? சரி சீக்கிரம் பேசிட்டு உள்ள வா" என்று உள்ளே சென்றார்.

மீண்டும் வருண் அழைக்கவும் எடுக்காமல் வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.

அலை பேசியோ முழுவதும் ஓசை எழுப்பி நின்றது. மீண்டும் அடிக்க இம்முறை மதன் கூப்பிட வேறு வழியின்றி எடுத்தாள்.

"ஹலோ!" என்றான்.

"சொல்லுங்க" என்றாள் குரலில் சுரத்தே இல்லாமல்.

"எங்க இருக்க? ரெடி ஆகிட்டியா? வந்து கூட்டிட்டு வரட்டுமா?" என்றான் மெதுவாக.

"இல்ல இன்னைக்கு என்னால வர முடியாதுன்னு நினைக்கிறேன்" என்றாள் தாரணி மெதுவாக.

"ஏன்" என்ற மதனின் குரலில் கடினம் தெரிந்தது.

"எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான்." என்றாள்.

"ஹாஸ்பிடல் போலாமா?" என்று கேட்கவும்.

"இல்ல வேண்டாம்." என்று மறுத்தாள்.

"சரி. நான் வரேன்" என்றான்.

"ஏன்?" என்றவள் நாக்கை கடித்து கொண்டாள்.

"இது என்ன கேள்வி? உனக்கு முடியாம இருக்க. உன்னை பார்க்கணும் போல இருக்கு" என்றான் மெதுவாய்.

"நான் வீட்ல இல்ல" என்றதும் மீண்டும் குரல் கடினமாக.

"பின்ன வேற எங்க இருக்க?" என்றான் மதன்.

"இங்க கேசவன் சார் வீட்ல இருக்கேன்" என்றதும் சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்தவன்.

"உனக்கு கொஞ்சம் கூட அறிவுன்றதே இல்லையா? எதுக்கு அடுத்தவங்க வீட்ல போய் இருக்க? நீ உன் வீட்ல இருக்க வேண்டியதுதானே?" என்றான் சினம் பொங்க.

அதுவரை அமைதியாய் இருந்தவள்.

"ஏன் எப்பவுமே எனக்கு அறிவு இல்லனே தோணுதா உங்களுக்கு? பேசாம அறிவு நிறைய உள்ள பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே?" என்றாள் வெடுக்கென்று.

"இப்போ எதுக்கு கோபபட்ற?" என்றான் பொறுமையாய்.

"நானா கோபப்படறேன்? எப்பவுமே எனக்கு அறிவு இல்லைன்னு சொல்லி மட்டம் தட்றது நீங்க தான். இங்க தங்கணும்னு எனக்கு ஒன்னும் ஆசை இல்ல. எங்கம்மா தான் இவங்களுக்கு போன் செஞ்சு ரெண்டு நாள் பார்த்துக்க சொல்லிருக்காங்க. அதுவுமில்லாம இவங்க ரெண்டு பேரும் எனக்கு இன்னொரு அம்மா அப்பா மாதிரி. அது எங்க அம்மா அப்பாக்கு தெரிஞ்சு தான் இவங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காங்க. உங்களுக்கு எங்க அம்மாவுக்கு அறிவு இல்லைன்னு தோணுச்சுன்னா அவங்க கிட்ட போன் செஞ்சு கேளுங்களேன்" என்றாள் அமைதியாய்.

"கோபத்துல ரெண்டு வார்த்தை கேட்டேன். அதுக்கு ஏன் இவ்ளோ பேசுற?" என்றான் மதன்.

"அந்த ரெண்டு வார்த்தையும் நாக்குல நரம்பில்லாம தான இருக்கு" என்றாள் காரமாக.

"ஹுக்கும்.. இன்னைக்கு என்னமோ உனக்கு பொசுக்கு பொசுக்குன்னு கோபம் வருது. சரி நா வரல. நீ உன்னை பார்த்துக்க. வச்சிடறேன்" என்று விட்டால் போதும் என்று வைத்துவிட்டான் மதன்.

உண்மைதான். அவளின் கோபம் வேறு யார் மீதோ... இருக்க... மாட்டியது இவன் தான்.

"எனக்கு கல்யாணம் வேண்டாம். ஏற்கனவே நான் எடுத்த முடிவு தான் சரி" என்று தீர்மானமாக முடிவு செய்தாள்.

எவ்வளவு தான் வெறுத்தாலும் அவளின் அனுமதியின்றி உள்ளே நுழைபவன் வருண் மட்டுமே.

இத்தனை ஆண்டுகள் மனதின் ஒரு மூலையில் பூட்டி வைத்திருந்த அவன் மீதான கண்மூடித்தனமான காதல் இன்று என்ன செய்தாலும் முடியாதென்று எட்டி பார்க்க தொடங்கியது.

தலையை பிடித்து கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள் தாரணி.

"கடவுளே எனக்கு மட்டும் எதுக்கு இப்படி ஒரு நிலைமை" என்று அழுதவளின் கரங்கள் தன்னையுமறியாமல் அவளின் வெற்று  கழுத்தை தடவி பார்த்தது.

என்ன நினைத்தாளோ தெரியவில்லை... அவர்களிடம் கூறிக்கொண்டு எவ்வளவு தடுத்தும் முக்கிய வேலை இருக்கிறதென்று வீட்டிற்கு வந்துவிட்டாள்.

உள்ளே நுழைந்தவள் நேராக தன் படுக்கறையினுள் சென்று பீரோவின் மேல் இருந்த அவளுடைய பெட்டியை எடுத்தாள்.

அந்த பெட்டியை காணும்பொழுதே அவளுக்கு மூச்சு விட சிரமமாக இருப்பதை  போல் உணர்ந்தாள்.

நீண்ட நேர இடைவெளிக்கு பின் அந்த பெட்டியை திறந்தவள்,  அதனுள் இருந்து அவளின் உயிராய் நினைத்த பொருளை நடுங்கும் கரத்தோடு கண்ணீரில் கரைந்தபடி எடுத்தாள்.

******

என்னவா இருக்கும்..??☺️☺️

💐யோசிங்க செல்லம்ஸ்...😊😊💐

கதை பிடிச்சா தொடர்ந்து படிங்க...

படிக்கிறதோட நிக்காம உங்க கருத்துக்களை இங்கே கொட்டிட்டு போங்க😊😊😊👌👌

அதுக்கு தான் இங்கயே பார்த்துட்டு இருக்கேன். அப்போ தானே அடுத்த பகுதி போட முடியும்...☺️☺️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro