19

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

தினமும் பார்த்தபோது
சொல்லாத வார்த்தைகளே
தினமும் நினைக்கும்போது
வதைக்கிறதே சிம்டாங்காரா...
🌷🌷🌷🌷🌷🌷

மிருத்திகா வை அவள் தங்கியிருந்த ஹாஸ்டலில் விட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் மரகதம் ஆச்சியும், ஷோபனா வும்.

வீட்டில் தாத்தா, அப்பா, மேகன், சிபி நால்வரும் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தனர். வீட்டினுள் வந்ததும் மேகன் தான், ஓடிவந்து கேட்கப் போகிறான் என்று ஆச்சியும் அம்மாவும் நினைக்க, ஓடி வந்தது தாத்தாவும், அப்பாவும்.

யோசனையுடன் மேகனைப் பார்த்த ஷோபனா,

"என்னடா? நாங்க இவ்வளவு தூரம் போயிட்டு வந்திருக்கோம், நீ அமைதியா உக்காந்து பார்த்துக்கிட்டு இருக்க?!!!" என்று கேட்டார்.

"அங்க என்ன நடந்திருக்கும்ன்னு தெரியும்.. பிறகு எப்படி நம்புவேன்?"

மேகனைப் பார்த்த அனைவருக்கும் மனதை பிசைந்தது... மரகதத்தை த் தவிர,

"நீ புத்திசாலின்னு நினைச்சேன் டா..."
என்றார் மரகதம் ஆச்சி.

"இப்ப என்னோட புத்திசாலிதனத்துக்கு என்ன ஆச்சு? "

"நான் ஒரு கதை சொல்லவா? காலை ல ஹலோ எஃப்எம் ல, ஆர்.ஜெ. ஜெயராம் சொன்ன கதை...
ஒருத்தன் தன்னோட வீட்டுல மீன் தொட்டிவச்சு மீன் வளர்த்தானாம்... அந்த தொட்டியில் இருந்த ஒரு மீன், கூட வளரும் மீன்களை எல்லாம் சாப்பிட்டு விடுமாம்... அந்த மீனோ ரொம்ப ராசியான மீன். அதுனால அந்த மீனையும் தூக்கிப் போட முடியல, வேற மீன்களும் வளர்க்க முடியல. அடுத்த நாள், ஒரு கண்ணாடி தடுப்பு வாங்கி வந்து மீன் தொட்டியின் நடுவில் பொருத்தினான். ஒரு பக்கம் ராசி மீன், மறுபக்கம் மற்ற மீன்களை வைத்து வளர்த்தான். .. ராசி மீன், மற்ற மீன்களை சாப்பிட ஓடி வந்து கண்ணாடித் தடுப்பில் மோதிக்
கொண்டதாம். தினமும் இதே நடந்திருக்கிறது... ராசி மீனுக்கு, 'தன்னால் அந்த மீன்களை நெருங்க முடியாது. அப்படி நெருங்கினால் நமக்குத் தான் அடிபடும்.' என்று நினைத்து, மற்ற மீன்களின் அருகில் செல்வதையே நிறுத்திவிட்டது... இதை கவனித்த மீன் வளர்ப்பவன், அடுத்த நாள் அந்த கண்ணாடி தடுப்பை எடுத்து விட்டானாம்... ஆனால் அதன் பிறகும் ராசி மீன் மற்ற மீன்களை சாப்பிடவே இல்லையாம்... ஏன் சொல்லுங்க ?" என்று பொதுவாக கேட்டார் மரகதம் ஆச்சி.

"மத்த மீன் பக்கத்துல போனா தனக்கு அடிபட்டுடும் னு ராசி மீன் பயந்து போச்சு." என்று கூறினான் மேகன்..

இப்படித்தான் பல மனிதர்கள் நீண்ட காலமாக தொடர்ந்து துன்பத்தை அனுபவித்தவர்கள், ஒரு நிலைக்கு மேல முயற்சி பண்றதையே விட்டுவிடுகிறார்கள்.... என்றார்.

இதேதான் இப்ப நீ பண்ண வேலையும்... எந்த விசயமா இருந்தாலும் முயற்சி யை மட்டும் விட்டுடாத புரியுதா?" என்று மரகதம் ஆச்சி கேட்டதும்,

"நினைச்சேன்... என்னடா! ஸ்கூலுக்கு போனவங்க நெத்தியில, பட்டை பட்டையா விபூதியும், குங்குமமும் இருக்கேன்னு... கோயிலுக்கு போயி, கதாகாலட்சேபம் கேட்டுட்டு வர்றீங்களா?" என்று கிண்டலடித்து சிரித்தான்.

"உதை படுவ ராஸ்கல்!" என்று மரகதம் செல்லமாக அதட்ட,

"என்னம்மா ஆச்சு? " என்று தாத்தா கேட்டார்.

"நாளைக்கழிச்சு ஒரு ஹோமத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க..."

"நம்ம கோயில்ல யா? " என்று தாத்தா கேட்க,

"இல்ல! நம்ம வீட்ல." என்று மரகதம் கூறியதும்,

"ஹஹ்ஹஹ்ஹா.... தாத்தா! இவங்க ரெண்டு பேரும் ஸ்கூலுக்கும் போகல, கோயிலுக்கும் போகல. ஜோசியர பாக்க போயிருக்காங்க...என்று சிரித்தவனின் கையில் நறுக்கென்று கிள்ளிவிட்டார் மரகதம்..

"ஷ்ஷ்ஆஆ! ஆச்சி! நான் தாத்தா இல்ல... வலிக்குது..."

"படவா! வாயமூடிக்கிட்டு கேக்கிறாயா?
இல்லையா?"

"நீ சொல்லும்மா! எங்க போனிங்க?" என்று தாத்தா பொறுமை இழந்து ஷோபனா விடம் கேட்டார்.

"ஸ்கூலுக்கு தான் ப்பா போனோம் அந்த பொண்ணயும் பாத்தோம். .. என்று நடந்த அனைத்தையும் கூறினார் ஷோபனா.

அதுவரை இடையே பேசாமல், அனைவரும் கவனித்துக் கொண்டிருந்தனர்.

"அந்தப் பொண்ணு இங்க வருமா? அப்படியே வந்தாலும், அதுனால என்ன நடந்துடப்போகுது?" என்று கேட்டார் பிறைசூடன்.

"நீங்க மனசால யோசிக்கிறீங்க மாப்பிள்ளை... இல்லைனா உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை." என்றார் மரகதம் ஆச்சி.

"கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க ஆச்சி! அவ இங்க வர்றது எதுக்கு? அவ வேறொருத்தனோட.... என்று சொல்ல முடியாமல் நிறுத்தினான் மேகன்.

"அவ வேறொருத்தருக்கு சொந்தமாயிட்டா ன்னு உங்கிட்ட சொன்னாளா?" என்று ஆச்சி கேட்க,

"ஸ்கூல் ரிசப்ஷனில பொய்யான தகவலும் கொடுக்க மாட்டாங்க ஆச்சி!"

"அவங்க சொல்ற தெல்லாம் ஆராய்ந்து சொல்றதும் இல்ல... மிருத்திகா சொன்னத சொல்லியிருக்காங்க... அங்க யாராவது அவ கல்யாணத்துக்குப் போனாங்களா?"

"போயிருக்க மாட்டாங்கன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று பிறைசூடன் கேட்டார்.

"எல்லாம் ஒரு யூகம்தான். .."

"ஆச்சி! இப்ப நீங்க தான், கற்பனை பண்றீங்க... இந்த விஷயத்தில் யாராவது பொய் சொல்ல முடியுமா?"

"அத தான் நானும் சொல்றேன்.... ஆனா யாரிடமாவது நெருங்கிப் பழகினாத்தானே உண்மை சொல்றாங்களா? எதையும் மறைக்கிறாங்களான்னு தெரியும்... அவதான் யாரையும் நெருங்க விடுறதில்வையே..."

"அது உங்களுக்கு எப்படி தெரியும்? செண்பகம் டீச்சர், மிருத்திகா வோட தோழி ன்னு சொன்னாங்களே?"

"ஆனா செண்பகமும் கல்யாணத்துக்கு போகல... மிருத்திகா சொன்னத தான் சொல்றா..."

"இப்ப நீ என்னதாம்மா சொல்ற?" என்று கேட்டார் தாத்தா.

"என்னைப் பொறுத்த வரை அவளுக்கு கல்யாணம் நடந்திருக்க வாய்ப்பில்லை." என்று ஆச்சி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே,

"அதெப்படி உங்களுக்கு நிச்சயமா தெரியும்?" என்று மேகன் கேட்க,

"என்னை பேச விடுறியா?" என்றார் மரகதம் ஆச்சி.

அனைவருமே அமைதியாக, ஸ்கூலுக்கு போனதிலிருந்து ஷோபனா சொன்ன விஷயங்களையே வேறு விதமாக கூறினார் மரகதம் ஆச்சி.

"அவளுக்கு கல்யாணம் ஆயிருந்தால், எங்களுடன் வெளியே வந்து பேச ஒத்துக் கொண்டிருக்க மாட்டா... எங்களிடம் பேசுவதை தவிர்க்கத்தான் நினைப்பாள்."

"ஒரு மரியாதைக்காக வந்திருக்கலாமே?" என்று மேகன் கேட்டதும், ஒரு பார்வை பார்த்தார்...

"சும்மா இரு ய்யா! அடிச்சுடப் போறா.."

"அனுபவம் பேசுதோ?" என்று மேகன் கலாய்க்க...

"இதுக்கு தான், ஹோமத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க ன்னு மட்டும் சொன்னேன்..." என்று மரகதம் ஆச்சி கோபமாக கூறியதும்...

"ஓகே! ஓகே! " என்று சீரியஸாக கவனித்தான் மேகன்.

அவன் செயலில் சிரிப்பு வந்தாலும், அதை வெளிக்காட்டாமல் பேச ஆரம்பித்தார்...

...."கல்யாணம் ஆன எந்த பெண்ணும் தன்னுடய காதலன் சம்மந்தப்பட்ட யாரையும் சந்திக்க விரும்பமாட்டாள். .கல்யாண வாழ்க்கை கொடுமையானதாக இருந்தாலும்கூட... அடுத்து, அவ கழுத்துலயோ, கால் விரல்களிலோ, தலை வகிட்டிலோ சுமங்கலிப் பெண்ணிற்குரிய எந்த அடையாளமும் அவளிடம் நான் பார்க்கவில்லை... "நம் வீட்டிற்கு வா!' என்று நான் சொன்னதும், பெற்றவர்களிடம்தான் அனுமதி கேட்கப் போவதாக கூறினாள்... புகுந்த வீட்டினரிடம் தானே அவள் அனுமதி கேட்கனும்?... கணவன் வெளி நாட்டில் இருந்தால் ஒரு பெண், புகுந்த வீட்டில் இருப்பாள்... இல்லைனா பிறந்த வீட்டில் இருப்பா... குழந்தை இருந்தால் மட்டுமே தனிவீட்டில் ஒரு சிலர் இருப்பர்...ஏன்னா? வேலியில்லாத பயிர், தனித்து வாழ விடமாட்டார்கள்.... இவளும் பல துன்பங்களைத் துரோகங் களையும் பார்த்து விட்டு தான் தனியாக ஹாஸ்டலில் தங்கியிருக்கா. 'இதுவரை அவளைத் தேடி யாரும் வந்ததே இல்லை." என்று ரிசப்ஷனிஸ்ட் சொன்னா.... கல்யாணம் ஆயிருந்தா புகுந்த வீட்டினர் கட்டாயம் பள்ளியைப் பார்க்க வந்திருப்பார்கள். இது ஒரு புறம் என்றால்....

"அவ இன்னும் மேகனை மறக்கவில்லை!"

"எப்படி ஆச்சி சொல்றீங்க?" என்று மேகன் தன்னை மறந்து கேட்டதும்,

"இந்த அவசரத்த அவ விசயத்தில காட்டியிருந்தா ... இந்நேரம் நான் பாட்டி ஆயிருப்பேன்.... வந்துட்டான் அஞ்சு வருஷமா ஆஸ்திரேலியா பெஞ்சை தேய்ச்சுக் கிட்டிருந்துட்டு... "என்று மேகனிடம் எகிறி விட்டு தொடர்ந்தார்...

"அவ குடும்பமே இந்த ஊர்ல இருக்க சங்கடப்பட்டு, ஊரை விட்டு போயும், அவ ஏன் இந்த ஊர்ல அவளோட அடையாளங்களை மறைத்து, ஹாஸ்டலில் இருக்கனும்? நீ தேடி வருவேன்னு காத்திருந்தாளா?"

"அண்ணன் வீட்டை விடவா ஹாஸ்டல் பாதுகாப்பானது?!! வீட்டில் ஒரு கல்யாணம் ஆகாத பெண் இருந்தா, உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் சும்மா விட்டுவிடுவார்களா? உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலையா? ஏன் உன் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணாம வச்சிருக்கீங்க? ஏதாவது பெரிய வியாதியோ? அந்த பொண்ணோட வருமானம் போயிடும் ன்னு கட்டிக்கொடுக்கலையா?
எவனிடமும் கெட்டுப் போயிட்டாளோ? என்று அவரவர் மனதில் இருக்கும் சகதியை அள்ளித் தெளிப்பதிலிருந்து தப்பிக்கவா ஹாஸ்டலுக்கு போனாள்?

ஏன்? கண்டவர்கள் வாயில் விழுகனும்...அவ கல்யாணம் பண்ணிக்கிட்டாலே தப்பிச்சிடலாமே? கல்யாணத்துல இருந்து தப்பிச்சு யாருக்காக காத்திருக்கா?

ஒரு பெண், தான் பெற்ற குழந்தைக்கு பேர் வைக்க வே, ஊர்ல போற வர்றவனுக்கெல்லாம், 'ஏன் அந்த பேரு வச்சா ன்னு" விபரம் சொல்லனும்... ஆனா இவ ரெண்டு அண்ணன் பிள்ளைகளுக்கும் மேகத்தின் பெயரையே வச்சிருக்கா... இதற்கே எத்தனை எதிர்ப்புகளை சந்தித்தாளோ? இவனை மறக்க நினைத்தால் பிள்ளைகளுக்கு, இவன் பேர வச்சிருப்பாளா? ...

"கல்யாணம் ஆயிடுச்சுன்னு பாதுகாப்புக்காக சொல்லி யிருக்கலாம். .."

இதுக்கு மேல அவ வந்தா தான் எந்த முடிவுக்கும் வர முடியும்....

எல்லோருக்குமே இப்போ கொஞ்சம் நம்பிக்கை வந்தது. கடவுளை வேண்டிக் கொண்டனர்.

"நம்புவோம்! ஆஸ்ட்ரேலியா பெரியவர் சொன்ன மாதிரி அதிசயம் நடக்கும். இதுவரை அவர் சொன்னது நடந்து விட்டது... உன் நிறைமதி யோட உண்மையான பெயர், பூமியாக இருக்கும் என்றார்..மிருத்திகா வுக்கு பூமாதேவி ன்னு அர்த்தங்கறதே அவர் சொன்னபடி அதிசயம் தானே? " என்று கூறி விட்டு அவன் வீட்டிற்கு சென்று விட்டான் சிபி.

தன் அறைக்கு சென்று ஜன்னல் வழியாக நிலவைப் பார்த்த மேகன், "நிஜமாவே அவ எனக்காகவா காத்திருக்கா? நான் தான் தப்பு பண்ணிட்டேனா? அன்னைக்கு ஆஸ்பத்திரில ஐசியூ அறைக்குள் போயிருக்கனும். .. இந்த அஞ்சு வருஷம் அவளை நினைச்சு கஷ்டப்பட்டதுக்கு இந்த ஊருக்கு ஒரு முறையாவது வந்திருக்கனும். ... ஒரு பொண்ணு அவ, இந்த ஊர்ல இருந்திருக்கா. .. எந்த நம்பிக்கையில காத்திருக்கா? அவளுக்கு இருந்த நம்பிக்கை எனக்கில்லையோ? அட்லீஸ்ட் அந்தப் பெரியவர் சொன்னபடி உடனே வந்திருக்கலாம்... நான் பிரச்சனைகளைப் பார்த்து பயப்படுறவன் இல்லை... இவ விஷயத்தில் ஏன் இப்படி நடந்து கொள்கிறேன்?...இப்ப நான் டீவி யை ஆன் பண்ணுவேன், முதலில் நான் பார்க்கும் பாட்டு அவ என்ன நினைக்கிறா ன்னு சொல்லனும் ஓகே வா?" என்று நிலவிடம் கூறிவிட்டு டீவி யை ஆன் செய்தான்.

கண்கள் இரண்டும் என்று
உம்மைக் கண்டு பேசுமோ
கண்கள் இரண்டும் என்று
உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று
உம்மைக் கண்டு பேசுமோ

'என்னடா மேகா ரொம்ப பழய பாட்டா இருக்கே?....' என்று நினைத்தவன், படம் பெயரை பார்த்தான்...
மன்னாதி மன்னன் என்று எழுதி இருந்தது. சரி பாட்டு வரிகளைப் பார்ப்போம் என்று வரிகளை கவனித்தான்.

பச்சைக் கிளியானால்
பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல்
தேரேறி ஓடுவேன்
பச்சைக் கிளியானால்
பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல்
தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்

கண்கள் இரண்டும் என்று
உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ

கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்த மரகதம்,

"என்னடா பழய பாட்ட கேட்டுக்கிட்டு ருக்க? இதெல்லாம் உனக்கு பிடிச்சிருக்கா என்ன?!!... எத்தன வருஷம் ஆச்சு இந்தப் படம் வந்து? நான் சின்ன்ன பெண்ணாய் இருந்த போது ரிலீஸ் ஆனது... ஆனா! இன்னும் காதலனை தேடும் பெண் பாடும் பாடல் டா இது! பாட்டோட வரிகளை உணர்ந்து பாடினா மட்டுந்தான் இந்த மாதிரி பாடல் களின் ஆழம் புரியும்.... நம்மால் பாடும் பெண்ணின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும்" என்று பாடலில் லயித்து கூறினார்.

பாடுவது மிருத்திகா போலவே தோன்றியது மேகனுக்கு.....

நின்ற இடம் யாவும்
நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை
அலை போல மோதுதே
நின்ற இடம் யாவும் நிழல்
போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை
அலை போல மோதுதே
கணையாழி இங்கே
மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே
மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே

"சரி! படுத்து தூங்கு.. லைட் எரியுதே, போட்டு விட்டு தூங்கிட்டியோ ன்னு பாக்க வந்தேன். " என்று கூறி விட்டு ஆச்சி கீழே சென்று விட்டார்.

என்னமாதிரி பாட்டு இது? நிறைய அழுதிருப்பாளோ? என்று எண்ணி கலங்கினான்.

"பாவி! என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா? இத்தனை வருஷம் ஒரு வித குற்ற உணர்வோட போராடிக் கிட்டிருந்தேன்னா, இப்ப வேற விதம்... எப்படியோ.... இவளக் கஷ்டப்பட வைத்து விட்டேனே ன்னு நான் வருந்தனும். ...அதானே" என்று நினைத்து மீண்டும் நிலவைப் பார்த்தான். " நீயாவது அவளுக்கு ஆறுதல் சொல்லியிருக்கக் கூடாதா?" என்று கேட்டான்....

ஆச்சி சொன்னதை நம்பி மேகன் மறுபடியும் கனவு காண ஆரம்பிச்சுட்டான்.

அவன் கனவு பலிக்குமா?

அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்...

❤❤❤❤❤❤








Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro