3.

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"பார்வதிம்மா!" என்று தனியே அழைத்தவர் தயங்கியபடி,

"இப்போவாதுஒரு வார்த்தை வரசொல்லிடலாம்மா?" என்றார் மெதுவாய் யாருக்கும் கேட்காத குரலில் மிக ஜாக்கிரதையாக.

"இல்லைண்ணா. இப்போ சொல்லி பாதிலயே வெளிய வந்தா என்ன நடக்கும்னு சொல்ல முடியாது. இதுக்கா அவரு இவ்ளோ நாள் கஷ்டப்பட்டாரு? இருக்கட்டும் விடுங்கண்ணே." என்று கண்ணீரோடு சென்றார் பார்வதி.

"இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு பாரும்மா. தேவை இல்லாத மன சிக்கல்களை உருவாக்கிட போகுது.  நாளைக்கு வந்து ஏன் என்கிட்ட சொல்லலைன்னு சொன்னா என்னம்மா பதில் சொல்லுவ?" என்றார்.

"அண்ணா இப்போ சொன்னாலும் உடனே வர முடியாது. சரி தகவலா சொல்லிடுங்க. ஆனா வரக்கூடாது. நான் சொன்னேன்னு சொல்லுங்க. அண்ணா இங்க இருக்க கொஞ்ச பேருல யாரு அவங்க ஆளுங்கன்னு தெரியாது. நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கும் புரியும். புரிய வேண்டியவங்களுக்கும் புரியும்." என்று கணவனை பார்த்தபடி அமர்ந்து கொண்டார்.

வந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே இருக்க, அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து பாலுவின் உயிர் நண்பரே அவருக்கு கொல்லியும் வைத்தார்.

"பார்வதிம்மா நீ மட்டும் இந்த வீட்ல எப்படி இருப்ப? நம்ம வீட்டுக்கு வந்துரும்மா." என்றார் வருத்தமாக.

கண்ணீரை துடைத்தவர், "அண்ணா இந்த வீடு சின்னதா இருக்கலாம். ஆனா அவர் எங்களுக்காக பார்த்து பார்த்து கட்டினது. அவர் எனக்காக எவ்ளோ ஆசையா கஷ்டப்பட்டு கட்டினார்னு உங்களுக்கு தெரியுமல? இங்க அவரே என் கூட இருக்கார்ணா. என் கடைசி காலத்துல இங்கேயே இருந்துடறேன் ணா." என்றதும், "சரிம்மா உன் விருப்பம் அது தான்னா அப்டியே இரும்மா. ஆனா ஒன்னு உனக்கு என்ன தேவைன்னாலும் இந்த அண்ணன் இருக்கேன் மறந்துடாத." என்றார்.

"என்னண்ணா உங்களை விட்டா எனக்கு யாரண்ணா இருக்கா." என்றாள் துக்கம் தொண்டையடைக்க அழுது கரைந்தவளை வற்புறுத்தி சாப்பிட வைத்தனர்.

*****

"பாரு! பாரு!" என்று தன் பின்னே அழகாய் சுற்றி கொண்டிருந்த கணவரை உள்ளுக்குள் ரசித்தாலும் அவர் சுற்றுவதின் காரணம் தெரிந்து பொய்யாய் திரும்பி முறைத்தார்.

"இப்போ எதுக்கு குட்டி போட்ட பூனையாட்டம் பாரு பாருன்னு என் பின்னாடியே திரியரிங்க?" என்றதும்.

"ப்ளீஸ் இன்னைக்கு மட்டும் ஒரே ஒரு முறை..." என்று கெஞ்சவும்

"என்னங்க நீங்க இவ்ளோ வயசாச்சு கொஞ்சம் கூட பொறுப்பில்லாம இருக்கிங்க." என்றார்.

"ப்ளீஸ் பாரும்மா. என் செல்லம்ல." என்று கெஞ்சவும்.

"போதும் நிறுத்துங்க. கொஞ்சம் கூட விவஸ்தையே இல்ல. இப்போ தான் இளமை ஊஞ்சல் ஆடுது இவருக்கு. இந்தாங்க. ஒண்ணே ஒன்னு மட்டும் தான் சொல்லிட்டேன்." என்று ஒரே ஒரு லட்டுவை தர பல நாள் விரதமிருந்து கிடைக்கும் பிரசாதம் போல் கண்கள் மின்ன வாங்கி சிறு குழந்தை போல் ஆசையாய் சாப்பிட்டார்.

"சுகர் முன்னூறு இருக்கு. ஞாபகம் இருக்கா. இன்னொன்னு கிட்ட வர கூடாது சொல்லிட்டேன். இன்சுலின் போட்றதை இப்போ தான் நிறுத்தி இருக்கு. அப்புறம் திரும்பி தினமும் ரெண்டு ஊசி போட்ற மாதிரி ஆகிடும். அது உங்களுக்கு வலிக்குதோ இல்லையோ எனக்கு வலிக்கும்." என்றார் பார்வதி கண்டிப்புடன்.

"என்னடி இப்போ எல்லாம் எப்போ பாரு மாமாவை திட்டிட்டே இருக்கே? கல்யாணம் ஆனா புதுசுல திட்ட சொன்னா கூட திட்டமாட்ட. இப்போ அப்படியே தலைகீழா மாறிடுச்சு. உனக்கு கொஞ்சம் கூட என் மேல அன்பே இல்ல போ." என்று கோபித்து கொண்டு சோஃபாவில் அமர்ந்து கொள்ள மெல்ல புன்னகைத்து அவரிடம் நெருங்கிய பார்வதி, அவரின் தலையை அழகாய் கோதி, "பாலுமா... என் மேல கோவமா? எனக்குன்னு வேற யார் இருக்கா? அப்போ உங்களுக்கு வயசு என்ன சாப்பிட்டாலும் எதுவும் ஆகாது ஆனா இப்போ நமக்கு வயசாகிடுச்சு. உங்களுக்கு ஏற்கனவே நிறைய பிராப்லம் இருக்கு. எல்லாத்தையும் என்னால முடிஞ்ச வரை கண்ட்ரோல் செஞ்சு என் கூடயே கூட்டிட்டு வரேன். உங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நான் என்ன செய்வேன் பா. அதான் பயம்." என்று கண் கலங்கினார் பார்வதி.

"அடடா என் பாரு அழறாளே... யாரு அவளை அழ வச்சது? சொல்லு தங்கம் உண்டு இல்லேன்னு பண்ணிடறேன்." என்று கோபமாய் இருப்பது போல் கூறவும் கணவனின் அன்பில் சிரித்து விட்டார் பார்வதி.

"போங்க பாலு. எப்போ பாரு விளையாட்டு தான் உங்களுக்கு." என்று வெட்கம் கொள்ள,

"இப்படி பார்க்க எவ்ளோ அழகா இருக்கு. இப்போ தான் என்னோட பாரு." என்று புன்னகைத்த பாலு மறுநாள் எழாமல் போவார் என்று தெரிந்திருந்தால் தூங்கவே விட்டிருக்க மாட்டாரோ பார்வதி.

யார் விதியை யார்  நொந்து கொள்வது...? வாழ்க்கை முழுவதும் வருவேன் என்று கூறி பயணிக்க நடுவழியில் தவிக்க விடும் சிறு உறவுகளின் பிரிவு தாங்கி கொள்ள முடியாத உயிர் வலியை தந்து விடுகிறது.

'இப்படி தனியா விட்டுட்டு போவேன்னு தெரிஞ்சுதா நேத்து முழக்க என்னை சுத்தி சுத்தி வந்திங்களா பாலு? நீங்க இல்லாம நான் இனி என்ன செய்ய போறேன்.' என்று பாலுவின் படத்தை பார்த்து கலங்கி கொண்டிருந்தார் பார்வதி.

"இந்நேரம் நீங்க எங்கேயோ ஒரு இடத்துல சொகுசோட குடும்பமா நிம்மதியா இருந்துருப்பிங்க... நான் வந்த நேரம் உங்க கண்ல படாம இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் இல்ல... என்னை விரும்ப ஆரம்பிச்சு என்னை கல்யாணம் பண்ண நாள்ல இருந்து கொஞ்ச நஞ்ச கஷ்டமில்லை. எல்லாத்தையும் என் ஒருத்திக்காக தாங்கிக்கிட்டிங்க. எந்த ஜென்மத்தில் புண்ணியம் பண்னேனோ நீங்க எனக்கு கிடைச்சிங்க. உங்க அன்பு எனக்கு கிடைச்சுது. நானும் கொஞ்சம் செல்பிஷ் தான் பாலு. எத்தனை மிரட்டல் வந்தாலும் தள்ளி வச்சுட்டு உங்களை நேசிச்சேன். அதான் உங்களை மறுக்காம ஏத்துகிட்டேன்." என்று கணவனோடு உரையாடி கொண்டே கண்கள் லேசாக அசத்தியது.

இரண்டு நாள் தூக்கமின்மை வயது மூப்பு என்று எல்லாம் சேர்ந்து கொள்ள முழு உறக்கம் இல்லையென்றாலும் சிறிது எட்டி பார்க்க அந்நேரம் சரியாக வீட்டின் கதவு தட்டப்பட்டது.

'யார் இந்த நேரத்துல?' என்று மணியை பார்க்க பத்து என்று காட்டியது.

பார்வதிக்கு பயத்தில் லேசாக வியர்க்க தொடங்கியது. மறுபடியும் கதவு தட்டப்பட, தயக்கத்துடனே எழுந்து சென்று இதயம் படபடக்க சிறிது தைரியத்தை வரவழைத்து கொண்டு திறந்தார்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro