2. அர்பிதா
அந்த காலை நேரம், விடிந்தும் விடியாமலும், சூரியன் பொறுமையாய் துயில் கலைத்து கொண்டு இருந்த விடியற்காலை நேரமது.
தரையில் முளைத்த புல் பூண்டுகள் மட்டுமே கண்ணிற்கு புலப்படும் அளவிற்கான பனி, விடியலின் மௌனத்தை குலைக்கும் வகையில் இசை பாடியபடியே ஒலித்து கொண்டு இருந்தன பல கொலுசின் சத்தங்கள்.
உறங்கும் நண்டும், தேளும் தன் வீடுகளை விட்டு வெளியே வந்து, "உறக்கம் கலைக்கும் சத்தம் யாருடையதோ!!" என்று பார்த்த நேரம், அவ்வழி கையில் வாளியுடன், விடியலின் அமைதியில் தங்களுக்குள் பேசி சிரித்த படி வந்து கொண்டு இருந்தனர் சில பெண்கள்.
"ஏன்டி ராசாத்தி.. என்ன நேத்து உன் மாமியார் கூட ஒரே சண்டை போல.. சத்தமா கிடந்தது.. என்னவாம் கிழவிக்கு".
"அட அத ஏன்க்கா கேக்குறே.. வர வர கிழவி தொல்ல தாங்கல... என் புள்ளைக்கு பிடிக்குமேன்னு தக்காளி போட்டு பருப்பு கடஞ்சி குழம்பு வெச்சா, என்னடி பருப்பையே காணோம்.. பருப்பு கழுவுன தண்ணிய எனக்கு ஊத்திட்டாயான்னு ஒரே ரகளை.. அதான் வேற ஒன்னும் இல்ல"
"அப்படியா.. அப்புறம் என்ன தான் ஆச்சு.. சும்மாவா விட்ட கிழவிய?"
"என்னத்த ஆகணும்.. காலையில எனக்கு முன்னாடியே வாளியை தூக்கிட்டு கிளம்பிட்டா, வரப்போரத்தை தேடிகிட்டு.. இந்நேரம் மத்த கிழவிங்க கூட சேர்ந்து எங்கயாச்சும் ஒதுங்கி இருக்கும்" என்றவர்கள் வந்தது என்னவோ, காலை கடனை வரப்போரத்தில் கழிக்க தான்.
மறுபுறம், "இந்தாடி பொன்னுதாயி.. நேத்து எதோ உன் பக்கத்து வீட்டு சிநேகிதி வெளியூர்ல இருந்து வர்ரதா சொன்னியே.. இன்னைக்கா வாரா?
"ஆமா ருக்கு.. இன்னைக்கு காலையில நம்ப ஊருக்கு வர மொத வண்டியில வரேன்னு சொன்னா..எங்க இருக்காளோ என்னவோ" யோசித்தார் பொன்னுத்தாயி.
"அட வந்த வேலைய மொத முடி.. வெளிச்சம் வந்துட்டா ஆம்பளைங்க வர ஆரம்பிச்சிடுவாக.. அப்புறம் இன்னைக்கு நாள் பூரா எதையும் திங்காம, குடிக்காம தான் அலையனும்" எச்சரித்தாள் ருக்கு.
விடியலில் இருந்த சிறு இருளும் விலகி, வெளிச்சம் பரவ செய்த நேரம்.. வந்த அனைத்து பெண்களின் அவசர வேலைகளும் முடிந்து, சிலர் வீடு திரும்பிய வண்ணம் இருந்தனர்.
"சீக்கிரம் நடங்கடி.. இப்டி பொறுமையா நடந்தா, பால்காரன் போய்ட போறான்.. அப்புறம் காலைல காபி தண்ணி இல்லாட்டி அந்த மனுஷன் கத்துவான்" அவசர படுத்தினாள் கூட்டத்தில் ஒருத்தி.
"அட உனக்கு அவசரம்னா நீ மொத போடி.. இந்த இருட்டுல கண்ட இடத்துல காலை வெச்சி அந்த பத்மா மாதிரி நானும் பாம்பு கடிச்சி சாகுறதுக்கா" என்றாள் இன்னொருத்தி.
"அவ பொழச்சாளா இல்லையா.. எதோ மருத்துவச்சி கிட்ட கூட்டிகிட்டு போறதா சொன்னாங்க" என்றாள் மற்றொருத்தி.
"அது என்னவோ.. இன்னைக்கு நாளைக்குன்னு இழுத்துகிட்டு இருக்குறதா பேச்சு".
"சரி தான்.. அவ வாங்கிட்டு வந்த ஆயுசு அவ்ளோதான் போல" ஏதோ உயிர் போவது படு சாதாரணம் போல பேசி கொண்டு தங்கள் அன்றாட கடமைக்கு திரும்பினர் அனைவரும்.
இது இவர்களுக்குள் என்றும் வாடிக்கை தான்.. கழிவறை வசதி இல்லாத காலத்து பிறந்த பெண்ணினத்தின் சாபம் இது.. பாம்போ, தேளோ எது கடித்தாலும், நான்கு ஊருக்கு பொதுவாய் இருக்கும் மருத்துவச்சியிடம் போகும் போதே பிரிந்த உயிர்கள் பல..
இறந்தவளின் சுவடும் கூட அழியா நிலையில், அதே வீட்டிற்கு புதிதாய் ஒருத்தியை மருமகளாய் கொண்டு வரும் வழக்கமும் இந்த பாழாய் போன சமூகத்தின் அங்கமாக தான் இருந்தது.
இதுவரை கடந்து வந்த தன் வாழ்க்கையை மனதில் அசைபோட்ட படி, அவ்விடம் இருக்கும் மர நிழலில் அமர்ந்து இருந்த பொன்னுத்தாயி, மனம் மட்டும் உற்சாகத்தில் மிதந்தது.
அதற்கு காரணம், பிடிப்பற்று கிடக்கும் தன் வாழ்வில், தனக்கென இருக்கும் ஒரே ஆறுதல் அன்னம்மாள் தான்.. சிறுவயது தோழி, திருமணம் ஆகி வேறு ஊரிற்கு சென்ற போதும் வருடத்திற்கு ஒருமுறையாவது சொந்த ஊர் வந்து பொன்னுத்தாயை சந்தித்து, ஒருவருட கதையை பேசி அன்றைய தினம் உடன் இருந்து செல்வது தோழிகளின் வழக்கம்.
இப்பொது அதே போல் தான், அவள் வருகைக்காக காத்திருந்த பொன்னுத்தாயின் மனதில் எதோ ஒரு இனம் புரியா பயமும், பதட்டமும் பரவவே செய்தது..
"என்ன இவ்வளவு நேரம் ஆகியும் அன்னத்தை காணோம்.. இந்நேரத்துக்கு எல்லாம் வந்து இருக்கணுமே.. என்ன அச்சோ இன்னைக்கு...!!" யோசித்து கொண்டு இருந்தவரை சுற்றி இருந்த சூழலும் கூட மாறவே செய்தது.
அடுத்த சில நொடிகளில் வந்து இறங்கிய அன்னம்மாளை கண்டதும், படு ஆனந்தம் பொன்னுத்தாயிக்கு..
ஆனால் எப்போதும் உற்சாகமும் சந்தோஷமும் தென்படும் அன்னம்மாள் முகத்திலோ குழப்பமும், பதட்டமுமே அதிகம் காண கிடைத்தது.. முக மாற்றத்தினை உடனே கண்டு கொண்ட பொன்னுத்தாயி,
"என்ன அன்னோ, முகமே வாடி இருக்கு.. ஏதும் பிரச்னையா? என்ன ஆச்சு இவளுக்கு?" யோசித்து கொண்டு இருக்கும் போதே பொன்னுத்தாயை நெருங்கியவர்,
"நான் அன்னைக்கு.... " என்று எதையோ கூற ஆரம்பிக்க, அதற்குள் வெளிச்சம் பரவி தெளிவாக துவங்கி இருந்த வானம் மொத்தமும், கருநிறம் பூசி கொண்டு, வெளிச்சம் அனைத்தையும் தன்னுள் அடக்கி கொண்டு, அவ்விடம் பரவும் காற்றும் கூட அதிக வேகம் எடுத்து, தரையில் கிடைக்கும் அனைத்தையும் மிதக்க செய்த படி அவ்விடத்தின் சூழலே சில நொடிகளில் எதிர் மாறாக மாற்றி வைத்தது.
"தாயி .. அது இங்கயும் வந்துடுச்சிடி .. இனி நம்மளால தப்பிக்கவே முடியாது.. ஹையோ கடவுளே... " என்றவரின் ஓலம் காற்றில் ஒலிக்க, அடுத்த நொடி அவர்களின் கண் முன் காற்றில் கரைந்த படி தென்பட்டது அது.
நிழலோ, நிஜமோ, ப்ரமையோ என்பதும் கூட சரியே புரியாத நிலையில் திகைத்து போய் அவர்கள் அவ்விடம் சிலையாக, அதை கண்ட அதற்கோ எத்துணை ஆனந்தம்.
மனதின் சிரிப்பு, இதழிலும் தவழ, நிழலாய் நிற்கும் அதனின் சிரிப்பு மட்டும் கண்ணுக்கு புலப்படாமல் இல்லை இருவருக்கும்.
அவ்விடம் நடப்பது எதுவும் சரியாய் புரியாத போதும், அன்னம்மாளின் முகத்தின் பயமும், மனதின் பதட்டமுமே எதோ சரி இல்லை, ஆபத்தில் மாட்டி கொண்டோம் என்பதை உணர்த்தியது பொன்னுத்தாயிற்கு.
அப்போது தான் நினைவு கூர்ந்தவராய், தாங்கள் நின்று கொண்டு இருப்பது வெட்ட வெளி சாலை என்றும், அருகில் இருக்கும் மக்களின் நடமாட்டத்தை உணர்த்த பொன்னுத்தாயி,
"யாராவது எங்களை காப்பாத்துங்க.. எங்களை எதோ ஒன்னு கட்டி போட்ட படி அசையவே விடாம பண்ணுது.. அண்ணே டீ கடகார அண்ணே, இங்க பாருங்க... " தன்னால் இயன்ற வரை உரக்க கத்திய பொன்னுத்தாயிற்கு, தன் குரல் ஏதோ மாயை போல தனக்கே திரும்ப ஒலிப்பதும், தன்னை சுற்றி நடமாடும் மக்கள் யாருமே தங்களை கவனிக்காததும் தாமதமாகவே புரிந்தது.
அதற்குள் கோவம் கொண்ட அந்த நிழல் உருவம், மரக்கிளை ஒன்றை வேர் வரை உரித்தெடுத்து, அதை பொன்னுத்தாயின் கழுத்தை குறி வைத்து, தன் கோவம் மொத்தத்தையும் ஒன்று சேர்த்து தாக்க வந்த நேரம், பொன்னுத்தாயி என்று அலறிய அன்னம்மாளின் அலறல் காற்றில் ஒலித்திருக்க, அலறி அடித்து கண் விழித்து எழுந்தமர்ந்தாள் அமிர்தா.
கண் விழித்தவளுக்கு, இது எப்போதும் போல பாட்டி கூறிய கதையின் கனவு பிம்பம் தான் என்பது புரிந்ததும் தான் ஏதோ ஒரு அமைதி கிடைத்தது.
அவள் அமைதி மூச்சை விடவும் இல்லை, அதற்குள் அலறிய அவளின் கைபேசியை எடுத்தவளின் முகம் மலர,
"சொல்லு அனு"
.....
"இதோ வந்துகிட்டு தான் இருக்கேன்"
....
"நீ ஏற்பாடுகளை எல்லாம் செஞ்சி வெச்சிடு.. நான் நேரா குளத்தங்கரைக்கே வந்துடுறேன்"
.....
"பாய் அனு.."
கைபேசியை வைத்தவளுக்கு, பாட்டி கூறிய தங்கள் கிராம வாழ்க்கையை அசை போட்ட படி இருந்தவளுக்கு, இறுதியாய் பாட்டி கூறிய அந்த கோர சம்பவமும் நினைவிற்கு வரவே செய்தது.
ஒரு நாள் பயணம் என்று கிளம்பிய போது, இயற்கை உபாதைகளுக்கு என்ன செய்வது என்று யோசித்த போது தான், எந்த வசதியும் இல்லாமல் அக்காலத்தில் தன் பாட்டிமார்கள் பட்ட துயரங்கள் அலையாய் நினைவிற்கு வர, அதன் தொடர்ச்சியாய், அந்த நினைவைமறக்கவும் நிகழ்வும் நினைவை தட்டவே செய்தது.
ஒரு வண்டி சாமானை ட்ராலியில் தள்ளிய படி, கையில் ஒரு லிஸ்ட் ஒன்றை வைத்து கொண்டு, வேறு எதையும் விட்டுவிட்டோமா என்று கவனமாக அனைத்தையும் சரி பார்த்து கொண்டு இருந்தான் மகேஷ்.
"என்னடா மகேஷ், உன் டூட்டி ஓவர் டைமால போய்ட்டு இருக்கு.. கொஞ்சம் கூட உன் மேல இரக்கம் காட்ட ஆள் இல்லாம போய்டுச்சே.. ஒரு பக்கம் அந்த பைத்தியக்கார பேய்.. இன்னோரு பக்கம் அழகான அனு.. இன்னொரு பக்கம் அம்மா.. எந்த பக்கம் போகுறதுனே தெரியாத கன்பூசன்ல, இது வேற ஒரு தேவை இல்லாத வேலை.
எள்ளு தான் எண்ணைக்கு காயுதுனா, எலி புழுக்கை நான் ஏன்டா நடுவுல காயணும்.. பேய்யா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா" புலம்பியது அவனின் சொந்த மனசாட்சி.
"தேவை இல்லாம புலம்பி, சும்மா இருக்க பேய்யை கிளப்பி விட்டுடாத.. அப்புறம் அது வந்து இவன் வேணும்.. அவன் வேணும்ன்னு லிஸ்ட் போட ஆரம்பிச்சிட்ட போகுது" எச்சரிக்கையை கேட்டதும்,
"அதுவும் சரி தான்.. நாம நம்ப வேலையை பாப்போம்" நினைத்தும் கூட முடிக்கும் முன்பே, அலறிய கைபேசியை எடுத்தவன்.
"சொல்லு அனு.. சூப்பர் மார்க்கெட்ல தான் இருக்கேன்.. பூஜைக்கு வேண்டியதை வாங்கிட்டு குளத்துக்கரை வந்துடுறேன்.. நீ ஐயர் கிட்ட ஒரு முறை பேசிடு"
.....
"அப்போ ஓகே.. நானும் டைம்க்கு வந்துடுறேன்" என்றவன் கைபேசியை வைத்து விட்டு, தனக்கு கொடுக்க பட்ட வேலையை பார்க்க துவங்கினான் அவன்.
"இவ பாட்டிக்கு திவசம்னா, இவ கஷ்ட படனும்.. அத விட்டுட்டு யார் வீட்டு திதிக்கோ நான் கஷ்டபடுறேன்.. எல்லாம் என் நேரம்" தலையில் அடித்து கொண்டவன்.
"மீதி இருக்க ரெண்டு லூசுகளும் எப்போ வருதுங்கனு தெரியலையே, இந்த நாலு பேரையும் ஒன்னு சேர்த்துட்டாலே, நம்மளோட பாதி வேலை முடிஞ்சிடும்" நினைத்தவனுக்கு,
சம்மந்தமே இல்லாம இந்த அப்பாவிகளை நம்ப கையாள பலி கொடுக்க போறோமே என்ற குற்ற உணர்வு அதிகம் இருக்கவே செய்தது.. அதிலும்,
"அனுவை போல ஒரு நல்ல பொண்ணை இப்டி ஆபத்துல மாட்டி விடுறோமே" என்று எண்ணியவனுக்கு நன்கு தெரியும்.
இதை தவிர தனக்கு வேறு வழி இல்லை என்று.
வர வேண்டிய அந்த இருவர் யார்?
அமிர்தா யார். அவளுக்கும் அனுவிற்க்கும் என்ன தொடர்பு?
மகேஷ் மனம் மாறுவானா?
இனி அடுத்த அத்தியாயத்தில் ..
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro